
உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்தது தொடர்ப்பாக, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் இரா.நல்லகண்ணு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் 19 வயது இளம்பெண் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உடல் முழுவதும் வன்கொடுமைத் தாக்குதல்கள் நடத்தி கொல்லப்பட்டுள்ளார்.
உடலை பெற்றோரிடம்கூட ஒப்படைக்காமல் போலீசாரே தீ வைத்து எரித்துள்ளனர். இந்தச் சம்பவம் நாட்டு மக்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணின் இந்த மரணம் இந்தியாவில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பெண்களுக்கும் உள்ள பாதுகாப்பு என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது.
ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறது. தலித் மக்கள் மற்றும் பெண்களுக்கான வன்கொடுமை பாதுகாப்பு சட்டங்கள் தீவிரத் தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கும்பல் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறப்பு விரைவு நீதிமன்றத்தின் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்கும் வகையில் மத்திய அரசு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் கேட்டுக்கொள்கிறது. இச்சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 03-10-2020 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.