Skip to main content

கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் தற்கொலை! 

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

pudukkottai district women incident police investigation

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நீலகண்டன் மனைவி கோகிலா. இவர்களுக்கும், அதே பகுதியில் உள்ள சிலருக்கும் பாதை பிரச்சனை  இருந்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பாதைப் பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக கண்ணையன் என்பவர் கொடுத்த புகாரில் கோகிலா மற்றும் சிலர் மீது கீரமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கோகிலா உள்பட 2 பெண்களை அதிகாலையில் சென்று கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் நீதிபதி நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியுள்ளார். இதையடுத்து, இரு பெண்களும் கீரமங்கலம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தனர். 

 

இந்த நிலையில், இன்று (01/10/2022) காலை கோகிலா, அவரது வீட்டில் சேலையில் தூக்கில் சடலமாக தொங்கினார். அருகில் ஒரு நோட்டுத் தாளில் எழுதப்பட்ட கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில், "பாதை பிரச்சனை சம்மந்தமாக மேற்பனக்காடு தி.மு.க. பிரமுகர் எம்.எம்.குமார், அவரது மனைவி புவனா (காவலர்) ஆகியோர் தூண்டுதலின் பேரில் கீரமங்கலம் காவல்நிலைய எஸ்.ஐ. ஜெயக்குமார், பெண் காவலர் கிரேசி ஆகியோர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். 

 

இதனால் எனது கணவரும் வீட்டிற்கு வராமல் வெளியில் இருக்கிறார். குழந்தைகள் அப்பாவை கேட்டு அழுகிறார்கள். இந்த மன உளைச்சல் எனக்கு அதிகமாக உள்ளதால் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று எழுதப்பட்டுள்ளது.

pudukkottai district women incident police investigation

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆலங்குடி காவல்துறை டி.எஸ்.பி. தீபக் ரஜினி மற்றும் கீரமங்கலம் காவல்நிலைய காவல் ஆய்வாளர் பாஸ்கரன், அறந்தாங்கி தாசில்தார் பாலகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்குரிய பாதையை அமைத்துக் கொடுத்ததுடன், கோகிலாவின் கணவர் நீலகண்டன் கொடுத்த புகாரின் பேரில் எம்.எம்.குமார், புவனா, உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், பெண் காவலர் கிரேசி, கீரமங்கலம் காமராஜ், நெய்வத்தளி துரைமாணிக்கம் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

இந்த நிலையில் கீரமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட  பா.ஜ.க, அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சியினர் மற்றும் உறவினர்கள் சம்மந்தப்பட்டவர்ளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஐந்து மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டடது. இதனால் முன்னெச்சரிக்கை நடவ்டிக்கையாக, சுமார் 100- க்கும் மேற்பட்ட காவல்துறையினர், வஜ்ரா வாகனத்துடன் குவிக்கப்பட்டிருந்தனர்.

pudukkottai district women incident police investigation

இந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை கேட்டிருந்ததால், ஞாயிற்றுக்கிழமை விசாரணையை தொடர்ந்து கைது நடவடிக்கைகள் இருக்கும் என்கின்றனர். 
 

 

சார்ந்த செய்திகள்