Skip to main content

பேருந்தில் பணத்தைத் தவறவிட்ட பெண்... ஒப்படைத்த அரசு பேருந்து நடத்துநர்!

Published on 15/09/2021 | Edited on 16/09/2021

 

 

pudukkottai district keeramangalam government hospital women money mission


சிகிச்சைக்காக மகளை அழைத்து மருத்துவமனைக்குப் பேருந்தில் சென்ற பெண் தவறவிட்ட பணத்தைப் பேருந்து திரும்பி வரும் போது ஒப்படைத்த அரசு பேருந்து நடத்துனரைப் பயணிகள் பாராட்டினார்கள்.

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது மகளுக்கு மருத்துவம் பார்க்கப் பட்டுக்கோட்டை மருத்துவமனைக்குச் செல்ல கொத்தமங்கலத்திலிருந்து 17- ம் நம்பர் நகரப் பேருந்தில் ஏறி கீரமங்கலத்தில் இறங்கி பட்டுக்கோட்டை செல்லும் தனியார் பேருந்தில் ஏறி சில கி.மீ. சென்ற நிலையில் டிக்கெட் எடுக்கப் பணத்தைத் தேடிய போது பணம் மற்றும் மருந்துச்சீட்டு இருந்த மணிப்பர்சை காணவில்லை. அழுதுகொண்டே நடுவழியில் நகரம் சன்னதி சாலையில் இறங்கி நின்றனர். அவர்களது அழுகையைப் பார்த்து அந்த வழியாகச் சென்ற நகரம் லெனின் அவர்களிடம் விசாரித்து வழிச் செலவுக்குப் பணம் கொடுத்துச் சென்றுள்ளார்.

 

சிறிது நேரத்தில் தனது கணவருக்கு போன் மூலம் தகவல் சொல்லிவிட்டு கீரமங்கலம் பேருந்து நிலையத்திற்கு நடந்து வந்து அழுது கொண்டிருந்த போது அறந்தாங்கி சென்ற 17-ம் நம்பர் நகரப் பேருந்து திரும்பி வந்தது. பேருந்து ஓட்டுநர் கொத்தமங்கலம் ஜெயராஜிடம் சென்று மணிப்பர்ஸ் கிடந்ததா என்று கேட்க அருகில் நின்ற நடத்துனர்  மணிப்பர்சில் என்ன இருந்தது என்று கேட்க ரூபாய் 4,200 பணம் மற்றும் மகளுக்கு மருத்துவம் பார்த்த மருந்து சீட்டு இருந்ததாகக் கூற அதைச் சரிபார்த்த நடத்துநர் அந்த மணிப்பர்சை உரியவரிடம் கொடுத்தார். பணத்தை கொடுத்த ஓட்டுநர், நடத்துன்ருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறிய அந்தப் பெண் மகளை அழைத்துக் கொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றார். இந்த சம்பவத்தைப் பார்த்த சக பயணிகளும் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனரின் செயலைப் பார்த்து பாராட்டினார்கள்.

 

இது குறித்து நடத்துனர் கூறும் போது, "அந்த தாயும், மகளும் கொத்தமங்கலத்தில் ஏறி கீரமங்கலத்தில் இறங்கினார்கள். நிறையப் பயணிகள் இறங்கிப் போன பிறகு பேருந்தில் ஏறிய குளமங்கலம் மூதாட்டி இந்த மணிப்பர்சை எடுத்து யாருடையது என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதை வாங்கி வைத்திருந்தோம். இப்ப மணிப்பர்சை தொலைத்தவர்களே கண்ணீரோடு வந்து கேட்ட போது அதற்குள் என்ன இருந்தது என்பதை உறுதி செய்து கொண்டு உரியவரிடமே ஒப்படைத்தோம். அவர்களும் சந்தோசமாக மகளைச் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். தொலைத்தவர்களிடமே பணத்தைத் திருப்பி கொடுத்தது எங்களுக்கும் நிம்மதியாக உள்ளது" என்றார்.


நாணயமாக அரசு பேருந்து ஊழியர்களை நாமும் பாராட்டுவோம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.