
கடலூர், நாகை, தஞ்சாவூர் மாவட்டத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், ரஃபேல் ராணுவ விமான ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
கடலூர் தலைமை அஞ்சலகம் முன்பாக குடியிருப்போர் சங்கத்தினரும், சப்- கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விருத்தாச்சலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் ஊர்வலமாக கடைவீதி நோக்கி சென்று, தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால், தபால் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.
இதேபோல் காட்டுமன்னார் கோயிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும், சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள், மீனவர்கள் வாழ்வுரிமையை பாதுகாக்க வலியுருத்தி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

விவசாய விளை நிலங்களை பாலைவனமாக்கி நிலத்தடி நீரை சீரழித்து, கடற்கரையோர மக்கள் வசிக்கும் பகுதியை அரசே காலிசெய்யும் முயற்சியை கைவிட வலியுறுத்தியும் மீனவர்கள் வாழ்க்கையை பறிக்கும் சாகர் மாலா திட்டத்தை கைவிட்டு கடலூர்
நாகை மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவிப்பு செய்யவும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து கன்டன முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.