கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் தனியார் பள்ளிகளில் மாற்றுச்சான்றிதழ் பெறுவதற்கு 2000 ரூபாய் கொடுத்தால்தான் சான்றிதழ் வழங்கப்படும் என நிர்ப்பந்தப்படுத்தும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ம.க மாணவர் சங்கத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததுடன், பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கும் மனு அனுப்பியுள்ளனர்.
இன்றைய சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக தனியார் பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்காக குழந்தைகளை படிக்க வைக்க முன்வரும் நிலையில், படிப்பு சான்றிதழை வாங்க தனியார் பள்ளிகளில் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் திட்டக்குடி பெருமுளை ரோட்டில் இயங்கி வரும் இந்தியன் மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளி நிர்வாகத்தினர் “சான்றிதழ் அளிக்கப்படமாட்டாது. எங்கள் பள்ளியில்தான் பயில வேண்டும்" என்று கட்டாயப்படுத்தி வருவதாகவும். கட்டாயப்படுத்தி சான்றிதழ் கேட்டால் சான்றிதழுக்கு 2000 ரூபாய் கட்டினால்தான் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் நிர்வாகம் கூறி வருவதாக குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். இதன் காரணமாக குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்.
அதையடுத்து திட்டக்குடி காவல் நிலையத்தில் இந்தியன் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியின் நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதனிடையே சான்றிதழ் வாங்குவதற்கு பணம் கொடுத்தால்தான் சான்றிதழ் வழங்கப்படும் என்று கூறி வரும் நிலையில், மாற்று சான்றிதழ் இல்லாமல் தனியார் பள்ளி மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் கடிதம் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து திட்டக்குடி பகுதியை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி மாணவர் சங்கத்தினர் ‘பணம் கொடுத்தால்தான் சான்றிதழ் என்று கூறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை வைத்து கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு இணையம் மூலமாக புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.