Skip to main content

என்.எல்.சி விபத்தில் இறந்தவரின் கர்ப்பிணி மனைவி கலெக்டரிடம் புகார்!

Published on 22/08/2020 | Edited on 22/08/2020
The pregnant wife of the person who died in the NLC accident complained to the Collector!

 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகேயுள்ள கொல்லிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார்.  என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் நடந்த பாய்லர் வெடி விபத்தில் உயிரிழந்தார். அதையடுத்து அவரது மனைவி உஷாதேவிக்கு என்.எல்.சி. நிறுவனத்தில் நிரந்தர வேலை வழங்க ஏற்பாடு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் வேலை வழங்குவது தொடர்பாக அவரது மாமனார், மாமியார் இடையூறு ஏற்படுத்துவதாக கூறி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் உஷாதேவி புகார் மனு அளித்துள்ளார். 

 

அந்த மனுவில்,

“எனது கணவர் அருண்குமாருக்கும், எனக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. தற்போது நான் 6 மாத கர்ப்பிணியாக உள்ளேன். இதனிடையே எனது கணவர் அருண்குமார் என்.எல்.சி பாய்லர் வெடி விபத்தில் உயிரிழந்து விட்டார். அவர் உயிரிழந்ததற்கு இழப்பீடாக ரூ 30 லட்சம் இழப்பீட்டுத் தொகையும், எனக்கு என்.எல்.சி நிறுவனத்தில் நிரந்தர வேலையும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இழப்பீட்டு தொகையில் முதல் கட்டமாக சுமார் ரூபாய் 20 லட்சத்திற்கான காசோலை எனது பெயருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த காசோலையை எனது மாமனார், மாமியார் ஆகியோர் எனக்கு தெரியாமல் திருடி சென்று விட்டனர். இதனைக் கேட்க சென்ற என்னையும் கொலை செய்து விடுவதாகவும், வீட்டை விட்டு வெளியே போகுமாறும் அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர்.  அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று பயமாக உள்ளது. தற்போது கணவனை இழந்து வயிற்றில் 6 மாத குழந்தையுடன் பல்வேறு சிரமங்கள் அடைந்து வருகிறேன். 

 

இந்த நிலையில் என்.எல்.சி. நிறுவனத்தில் கருணை அடிப்படையில் எனக்கு வழங்க இருக்கும் வேலையை எந்த விதத்திலாவது தடுத்துவிடலாம் என எனது மாமனார், மாமியாரர் இடையூறு செய்கிறார்கள். எனது மாமனார், மாமியார் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு, நிறுவனம் அறிவித்த வேலையை எனக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”   என குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்