Skip to main content

மலை மீது ஏறி ஹெலிகேம் மூலம் வீடியோ எடுத்த வெளிநாட்டுக்காரர்...போலீஸ் வலை!!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள மலை மீது ஏற தடைவிதிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்திருவிழான் இறுதி நிகழ்வான மகாதீபத்தன்று மலையேறி உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதம் என்பதை வணங்குவதை காலம் காலமாக லட்சத்துக்கும் அதிகமானோர் கடைப்பிடித்து வந்தனர். இரண்டு ஆண்டுகளாக அதற்கு தடை விதிக்கப்பட்டு அனுமதி அட்டை பெறுபவர்கள் மட்டும்மே மலையேற அனுமதி என 2500 பேர் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 1ந்தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்காக அதிகாரிகள் அதற்கான பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

 

police searching a foreigner

 

மற்ற நாட்களில் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு காரணம், மேலே சென்று வழிதெரியாமல் சிக்கிக்கொள்வது, அங்கே உள்ள குகைகளில் தங்குவது, யார் என தெரியாதவர்கள் ஹெலிகேம் என்கிற சிறு விமானத்தில் கேமராவை பொருத்தி வீடியோ எடுப்பது என செயல்படுகின்றனர். அதனால் மலையேறி யாரும் ஹெலிகேம் பறக்கவிட்டு படம் எடுப்பதை தடை செய்துள்ளனர். ஆனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தடையை மீறி மலை மீது செல்வது, ஹெலிகேம் மூலம் வீடியோ எடுப்பது போன்றவை தொடர்ந்து நடந்து வருகிறது.

திருவண்ணாமலைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தடையை மீறி மலை ஏறுவதை தடுக்க வனத்துறையினர் ரமணாஸ்ரமம் அருகிலும், மலைமீது உள்ள முளைப்பால் தீர்த்தம், கந்தாஸ்ரமம் ஆகிய பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு  பலகையை வைத்துள்ளனர். இந்நிலையில், நவம்பர் 13ந்தேதி காலை வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் ஹெலிகேம் கேமரா மூலம் மலை உச்சியிலிருந்து படம் பிடித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது.


இதனை அறிந்த சமூக ஆர்வலர் சிலர் மலை உச்சிக்கு சென்று அந்த நபரை பிடித்து வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துவர முயன்றுள்ளனர். ஆனால் அந்த சுற்றுலா பயணி வர மறுத்து தகராறு செய்துள்ளார். அப்போது அந்த வெளிநாட்டினரை தங்களது செல்போனில் படம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர்களின் பிடியில் இருந்து கீழே இறங்கி தப்பி சென்றுவிட்டாராம். இதுப்பற்றி அறிந்த வனத்துறையினர் காவல்துறை உதவியுடன் திருவண்ணாமலையில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம், ஆட்டோ ஓட்டுநர்கள், தங்கும் விடுதி நடத்துபவர்களிடம், மலை மீது சென்ற நபரின் புகைப்படத்தை காண்பித்து இந்த நபர் யார்? தற்போது எங்கு சென்றுள்ளார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்