Skip to main content

காவலரை ஏமாற்றிய நபர்; போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

police investican shocked by investigation statement 

 

திருவள்ளூர் நேதாஜி சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் வேலு (வயது 47). இவர் தமிழ்நாடு காவல்துறையில் கியூ பிரான்ச் பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் குன்னூர் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (வயது 47) என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

 

அப்போது ஜெகதீஷ், திருவள்ளூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறேன். தற்போது வசித்து வரும் அந்த வீட்டை வாடகைக்கு விடுவதாகக் கூறி காவலர் வேலுவிடம் ஒரு லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜெகதீஷ் குடியிருந்த வீட்டிற்குச் சென்ற வேலு வீட்டைப் பற்றி அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த ஜெகதீஷ் வாடகைக்கு குடியிருந்து வந்தது தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வேலு, தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவுடன் ஜெகதீஷிடம் இதுகுறித்து கேட்டபோது பணத்தைத் திருப்பித் தர முடியாது என்று கூறியதுடன் கொலைமிரட்டலும் விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜெகதீசை தொடர்ந்து தேடி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் போலீஸ் ஜெகதீசை கைது செய்தனர். மேலும், கைதான ஜெகதீஷ் பல்வேறு நபர்களிடமும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம், நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பெற்றும் மோசடி செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்