Skip to main content

“சீக்கிரம் கொலைகாரனை புடிங்க சார்” - போலீஸாரிடம் சவுண்ட் விட்ட குற்றவாளி குல்லாவால் சிக்கிய சம்பவம்! 

Published on 23/06/2022 | Edited on 23/06/2022

 

Police arrested criminal in two woman passed away case

 

குமரி மாவட்டம், முட்டம் தூய குழந்தை ஏசு தெருவைச் சேர்ந்த ஆன்றோ சகாயராஜ், துபாயில் ஒரு ஹோட்டலில் சூப்பர்வைசராக உள்ளார். இவரது மனைவி பவுலின் மேரி. இவர்களுடைய இரண்டு பிள்ளைகளில் ஒருவர் தந்தையுடன் துபாயில் வசித்துவருகிறார். இன்னொருவர் சென்னையில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இதனால் முட்டத்தில் உள்ள வீட்டில் பவுலின் மேரியும் அவருடைய தாய் தெரசம்மாளும் வசித்து வந்தனர்.

 

பவுலின் மேரி வீட்டில் தையல் பயிற்சி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார். இங்கு சுமார் 25-க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சிக்கு வந்து சென்றனர். இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி இரவு பவுலின் மேரியின் வீட்டின் மின்சாரத்தைத் துண்டித்த நிலையில் வீட்டுக்குள் பவுலின் மேரியும் அவரின் தாய் தெரசம்மாளும் கொடூரமாகக் கொலைச் செய்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

 

இது சம்மந்தமாக கொலையாளியைக் கண்டுபிடிக்க மாவட்ட எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் நேரடி பார்வையில் தக்கலை மற்றும் குளச்சல் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்துவந்தது. இதில், கொலையாளி பயன்படுத்திய ஒரு குல்லாயை வீட்டின் அருகிலிருந்து கைப்பற்றி அந்த குல்லாவை பயன்படுத்தியவர் யார் என்பது குறித்துத் தெரிந்தவர்கள் தகவல் கூறச் சொல்லி காவல்துறையினர் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

 

Police arrested criminal in two woman passed away case

 

கஞ்சா கோஷ்டியினரின் நடமாட்டம் அந்த பகுதியில் அதிகம் இருப்பதால், சில இளைஞர்களைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அதிலும் துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில், தையல் பயிற்சிக்கு வந்த ஒவ்வொரு பெண்ணையும் தனித்தனியாக காவல்துறையினர் விசாரித்தனர். அதில், ஒரு பெண், “குமரி மாவட்டம், கடியபட்டணத்தைச் சேர்ந்த மீன் பிடி தொழிலாளி அமலசுதன் என்னை எப்போதும் பைக்கில் பின்தொடா்ந்து வருவார். நான் பலமுறை எச்சரித்தும் அவர் கேட்காததால் பவுலின் மேரியிடம் சொன்னேன்.

 

உடனே அவர் அவனிடம் சண்டை போட்டு எச்சரித்தார். அப்போது அந்த பெண் எடுத்த வீடியோவையும் போலீசில் கொடுத்தார். போலீசார் அந்த வீடியோவை பார்த்த போது அமலசுதனின் இடுப்பில் போலீசார் கைப்பற்றிய குல்லாய் இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மொட்டை தலை கொண்ட அவர் ஏற்கனவே இரண்டு பெண்களைத் திருமணம் செய்து அவர்களுடன் வாழாமல் மேலும் பல பெண்களின் பின்னால் சுத்தி தொந்தரவு செய்துவந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் பல பெண்களிடமும் முறையற்ற தொடர்பிலும் இருந்துவந்துள்ளார்.

 

Police arrested criminal in two woman passed away case

 

அவருக்கு அடிக்கடி குல்லா அணியும் பழக்கமும் இருந்துள்ளது. பவுலின் மேரி, அவரை மோசமாக திட்டியதால்  அவரை கொலைச் செய்ய திட்டமிட்டு 6-ம் தேதி இரவு மின்சாரத்தை கட் செய்து விட்டு, வீட்டுக்குள் புகுந்த அமலசுதன், அயன்பாக்ஸால் பவுலின் மேரி தலையில் அடித்து கொலை செய்துள்ளார். மேலும் சத்தம் போட்ட தெரசம்மாளையும் அதே அயன்பாக்ஸால் தாக்கி கொலை செய்துள்ளார். அதுமட்டுமின்றி அவர்கள் அணிந்திருந்த 15 பவுன் நகையையும் பறித்துச் சென்றுள்ளார்.

 

அவர் தலையில் அணிந்திருந்த குல்லாயையும், கொலைக்குப் பயன்படுத்திய அயன்பாக்ஸையும் வீட்டுக்கு வெளியே உள்ள ஒரு தென்னை மர தோப்பில் வீசி விட்டுச் சென்றுள்ளார். அடுத்த நாள்  ஊர் மக்கள் மற்றும் போலீசரோடு நின்று கொண்டு கொலையாளியை உடனே கண்டுபிடிக்க வேண்டுமென்று ஆவேசமாகவும் பேசியுள்ளார். கொலையைத் திசை திருப்ப இந்த கொலையைக் கஞ்சா கோஷ்டிகள் தான் செய்து இருக்க வேண்டும் என்று போலீசாரிடமும் கூறியிருக்கிறார். மேலும் யாருக்கும் சந்தேகம் வந்து விடாமல் இருக்கத் தலைமறைவாகாமல் ஊருக்குள்ளே தான் சுற்றி வந்துள்ளார். மேலும் நகைகளை அவருடன் முறையற்றத் தொடர்பில் இருக்கும் இரண்டு பெண்களிடம் கொடுத்துள்ளார்.


இதை எல்லாம் அறிந்த காவல்துறையினர் அமலசுதனை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்