தமிழ்நாட்டில் கடந்த 45 நாட்களாக ஊரடங்கு நடைமுறையிலிருந்த நிலையில், இன்றுமுதல் (14.06.2021) பல புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் சலூன் கடைகள், தேநீர் கடைகள் உள்ளிட்டவை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தற்போது திருச்சி மலைக்கோட்டை பகுதியில் சுமார் 700 தரைக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்துவருகின்றனர்.
ஆனால், அவர்களுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படாததால் அரசு அவர்களுக்கும் அனுமதி வழங்கிட வேண்டுமென்று தரைக்கடை வியாபாரிகள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் நிவாரண நிதியாக நடைபாதை வியாபாரிகளுக்கு அரசு வழங்கிய நிதியைப் போல 3,000 ரூபாய் கூடுதலாக வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.