Skip to main content

போலீஸின் தீவிர விசாரணையில் தெரியவந்த கொலை வழக்கு..! 

Published on 17/05/2021 | Edited on 17/05/2021

 

Person passes away in thindivanam police  revealed the truth

 


திண்டிவனம் அருகே சில மாதங்களுக்கு முன்பு கிணற்றில் பிணமாக மிதந்த வாலிபர் வழக்கில், தற்போது அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  வெளியே தெரியவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள கீழ் சேவூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பிரேம்குமார், வயது 35. இவர், தனது குடும்பத்தினருடன் சென்னை பிராட்வே பகுதியில் வசித்துவருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி அதே கீழ்சேவூர் கிராமத்தில் விவசாயக் கிணற்றில் அவர் பிணமாக மீட்கப்பட்டார். 

 

இது தொடர்பாக பிரம்மதேசம் போலீசார் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிரேம்குமார், அவரது தாய் லட்சுமி ஆகியோரை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. சென்னை பிராட்வேயில் பிரேம்குமார் சொந்தமாக காய்கறி கடை நடத்தி வந்துள்ளார். அதனை விற்றுவிட்டு பணம் தரும்படி அதே கீழ்சேவூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் ராமதாஸ் என்பவரிடம் பிரேம்குமார் கூறியுள்ளார். 

 

அந்தக் கடையை ராமதாஸ் 27 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். அந்தப் பணத்தில் 17 லட்சம் ரூபாய் பணத்தை மட்டுமே பிரேம்குமாரிடம் கொடுத்துவிட்டு, ஏழு லட்ச ரூபாய் பணத்தைத் தான் கடனாக வைத்துக் கொள்வதாகும் சில மாதங்களுக்குப் பிறகு அந்த ஏழு லட்சம் பணத்தை திருப்பித் தருவதாக பிரேம்குமாரிடம் கூறியுள்ளார் ராமதாஸ். ஆனால், மாதங்கள் பல கடந்தன. ராமதாஸ், அந்த ஏழு லட்சம் பணத்தை பிரேம்குமாருக்கு திருப்பித் தராமல் ஏமாற்றிவந்துள்ளார். பிரேம்குமார், அந்த ஏழு லட்சம் பணத்தைத் தருமாறு அடிக்கடி ராமதாசை கேட்டுள்ளார். 

 

அந்தப் பணத்தைத் திருப்பித் தர மனமில்லாத ராமதாஸ், அடிக்கடி பணம் கேட்டு தொல்லை தரும் பிரேம்குமாரை தீர்த்துக்கட்ட முடிவுசெய்துள்ளார். அதன்படி கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி அந்த ஏழு லட்சம் பணம் தருவதாக கூறி சென்னையிலிருந்து தனது நண்பர்களுடன் ஆட்டோவில் கீழ் சேவூர் கிராமத்திற்கு பிரேம்குமாரை அழைத்துவந்துள்ளார். அங்கு, பிரேம்குமாருக்கு, தனது நண்பர்களுடன் சேர்ந்து ராமதாஸ் அதிக அளவில் மதுவை ஊற்றிக்கொடுத்துள்ளார். 

 

இதில் பிரேம்குமார் அதிகளவில் போதை அடைந்துள்ளார். அந்நிலையில், ராமதாசும் அவரது நண்பர்களும் பிரேம்குமாரை அருகில் இருந்த விவசாய கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளனர். சம்பவத்திற்கு மறுநாள் பிரேம்குமார் தாயார் லட்சுமியிடம் செல்ஃபோனில் தொடர்புகொண்ட ராமதாஸ், உங்கள் மகன் பிரேம்குமார் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துவந்தார். அந்தப் பெண்ணை தற்போது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். எனவே, உங்களை இங்கு அழைத்து வரும்படி பிரேம்குமார் என்னிடம் கூறியுள்ளார். அதற்காக நானும் எனது நண்பர்களும் உங்களை அழைப்பதற்காக சென்னைக்கு வருகிறோம் என்று கூறியதோடு, அதன்படி ஒரு காரில் தனது சக நண்பர்களுடன் ராமதாஸ் சென்னைக்கு சென்றுள்ளார்.

 

அங்கிருந்து லட்சுமியை அந்தக் காரில் அழைத்துவந்துள்ளனர். அப்படி வரும்போது ஆரணி பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து லட்சுமியை காரில் இருந்தபடியே கழுத்தை நெரித்துக் கொலை செய்து சாலையோரம் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். சாலையோரம் கிடந்த லட்சுமியின் உடலை போலீசார் கண்டறிந்து வழக்குப் பதிவுசெய்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை போலீசார் விசாரணை நடத்திவந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் அப்பகுதியில் சம்பவத்தன்று பயன்படுத்தப்பட்ட செல்ஃபோன்களின் சிக்னலை ஆய்வுசெய்ததில் கொலையாளிகள் சிக்கியுள்ளனர். 

 

அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், பிரேம்குமாரை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது. அதையடுத்து திருவண்ணாமலை போலீசார் பிரம்மதேசம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து பிரம்மதேசம் போலீசார் திருவண்ணாமலை சென்று அங்கு பிடிப்பட்ட கொலையாளிகளை அழைத்துவந்து விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் கொலையாளிகள் அளித்த தகவலின் பேரில் பிரம்மதேசம் போலீசார் சென்னை வியாசர்பாடி எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் ராஜன் என்பவரை கைது செய்துள்ளனர். இந்தக் கொலையில் தொடர்புடைய ராமதாஸ் உட்பட மேலும் பலரை பிரம்மதேசம் போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள். விரைவில் அனைவரையும் கைது செய்வோம் என்கிறார்கள்  போலீசார். ரூ. 7 லட்சம் பணத்திற்காக தாயையும் மகனையும் கொலை செய்த கும்பலின் கொடூர செயல் திண்டிவனம் பகுதியில் உள்ள மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.