Skip to main content

தென்தமிழக மக்களின் துயர் துடைக்க நீண்ட வடதமிழக மக்களின் கரங்கள்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
 people of North Tamil Nadu helped the rain-affected people of the southern district

தென் தமிழ்நாட்டில் பெய்த 200 செ.மீ அளவிலான பெருமழை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியை தத்தளிக்க வைத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் கனமழையின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைத்து, சமுதாய சமையல் அறைகள் அமைத்து உணவு தரப்பட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறி ஆகியுள்ளது, சிறு தொழில் நிறுவனங்கள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டன. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மற்றும் தென் தமிழ்நாட்டில் பெய்த மழையை தேசிய பேரிடராக அறிவித்து நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அடுத்த நாள் இதற்கு பதிலளித்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை எல்லாம் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது, தேசிய பேரிடர் நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் தர முடியாது என கூறினார். இது தமிழக மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மழை சேதங்களை ஆய்வு செய்ய நிர்மலா சீதாராமன் தென் தமிழகத்திற்கு வருகிறார்.

people of North Tamil Nadu helped the rain-affected people of the southern district

மழையால் பாதிக்கப்பட்ட அந்த நான்கு மாவட்டங்களை மக்களின் துயர் துடைக்க வட மாவட்டங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளனர். தென் தமிழ் நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் எ.வ.வேலு உதயநிதி, தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் போன்றவர்கள் களம் இறங்கி உள்ளனர். தூத்துக்குடி எம்.பி கனிமொழி அங்கேயே இருந்து நிவாரண பணிகளை செய்து வருகிறார்.

திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் சில கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 50 லட்ச ரூபாய் மதிப்பிலும், திருப்பத்தூர் மா.செ தேவராஜ் எம்.எல்.ஏ சார்பில் 15 லட்சத்துக்கும், கள்ளக்குறிச்சி மா.செ வசந்தம் கார்த்திகேயன் 12 லட்ச ரூபாய் மதிப்பிலும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்துள்ளனர். அதேபோல் வேலூர் மாவட்டத்தில் இருந்தும் சில லட்ச ரூபாய்க்கான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் வழியாக அனுப்பி வைத்தனர். இப்படி விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் ஆளும் கட்சியினர், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர். தென் தமிழ்நாட்டு மக்களின் துயரத்தை துடைக்க வடக்கு மாவட்ட மக்களின் கரங்கள் நீண்டுள்ளன. 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.