Skip to main content

கொத்தமங்கலத்தில் பொதுமக்கள் சாலை மறியல்- சமாதானம் செய்த எம்.எல்.ஏ 

Published on 11/05/2018 | Edited on 11/05/2018
salai mariyal1

  

 கொத்தமங்கலத்தில் குடிதண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். மெய்யநாதன் எம்.எல்.ஏ சமாதனம் செய்தனர்.

 

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மாவட்டத்தில் பெரிய ஊராட்சி. இந்த கிராமத்தில் ஒவ்வொரு பகுதியிலும் நீர் தேக்க தொட்டிகள் அமைத்து குடிதண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த பல மாதங்களாக ஒவ்வொரு பகுதியிலும் குடிதண்ணீர் பிரச்சணை ஏற்பட்டடுள்ளது. அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 350 அடி ஆழம் வரை அமைக்கப்பட்டிருந்த ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் குடிதண்ணீர் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொரு பகுதி மக்களும் அடிக்கடி குடிதண்ணீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அதன் பிறகு அந்த பகுதிக்கு புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.

 

    அதே போல கொத்தமங்கலம் மேற்கு சிதம்பரவிடுதி பகுதி பொதுமக்களுக்கு குடிதண்ணீர் கொடுத்து வந்த ஆழ்குழாய் கிணறு பழுது ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக குடிதண்ணீர் பிரச்சணை ஏற்பட்டுள்ளது. அதனால் அருகில் உள்ள விவசாய ஆழ்குழாய் கிணறுகளில் குடிதண்ணீர் பிடித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மின்சாரம் பற்றாக்குறையாக வருவதால் விவசாய ஆழ்குழாய் கிணறுகளும் இயங்குவதில்லை. அதனால் குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். அதனால் குடிதண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட, ஒன்றிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலனில்லை என்பதால் நேற்று திடீரென பெண்கள், பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

    சாலை மறியல் நடப்பதை அறிந்து அங்கு சென்ற கீரமங்கலம் போலிசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வர வேண்டும் என்று போராட்டத்தில் இருந்த பெண்கள் கூறிவிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சமாதானம் பேசினார். தொடர்ந்து ஒன்றிய அதிகாரிகள் வரும் வரை காத்திருப்போம். ஆனால் பஸ்கள் செல்ல அனுமதிக்கலாம் என்று கூறியதால் பஸ்கள் சென்றது. தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வந்து விரைவில் குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுத்த பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

விசாரணைக் கைதி மரணம்; சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
madurai youth karthi incident Relatives involved in the road block

மதுரை மாவட்டம் மதிச்சியம் என்ற பகுதியில் கார்த்திக் (வயது 30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் வழிப்பறி வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் போலீசாரால் கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 3 ஆம் தேதி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, மருத்துவ தகுதிச் சான்று வழங்கப்பட்ட பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து 4 ஆம் தேதி திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட ஒரே நாளில் சிறையில் இருந்து உடல் நலக்குறைவால் விசாரணை சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும் கார்த்திக் உயிரிழப்புக்கு காவல்துறையினரே காரணம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். 

madurai youth karthi incident Relatives involved in the road block

இந்நிலையில் இளைஞரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியும், உரிய நிவாரணம் அளிக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே இன்று (07.04.2024) சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.