Skip to main content

புயலால் வீடிழந்து 30 நாட்களாக தெருவோரத்தில் வசிக்கும் கீரமங்கலம் மக்கள்!!

Published on 15/12/2018 | Edited on 15/12/2018

கீரமங்கலம் அறிவொளி நகர் மக்கள் கஜா புயல் தாக்குதலில் வீடுகளை இழந்து மரத்தடியிலும், தெரு ஓரங்களிலும் வசிக்கின்றனர். நிவாரணம் என்ற பெயரில் கொடுக்கப்பட்ட பழைய துணிகளையே உடுத்தி வருகிறார்கள்.

     

people of Keeramangalam who live in the street for 30 days

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய நேரத்தில் கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகரில் ( நரிக்குறவர் காலனி ) இருந்த 54 வீடுகளில் காலனி வீடுகுள் உள்பட ஓட்டு வீடுகள், குடிசை வீடுகள் என பல வீடுகள் மரங்கள் விழுந்தும் காற்றின் வேகத்திலும் உடைந்து நாசமானது. இதனால் தங்கள் உடைமைகளை இழந்து மழையில் நனைந்தும், இடிந்த குடிசைகளுக்குள்ளும் இருந்துள்ளனர். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் உணவுக்கே திண்டாட்டமாக இருந்த நிலையில் ஒரு முறை ரேசன் அரிசி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த வழியாக வெளியூர்களுக்கு நிவாரணம் கொடுக்கச் சென்றவர்கள் கொடுக்கும் உணவு, மெழுகுவர்த்தி போன்ற நிவாரணப் பொருட்களை  வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். 

     

இவ்வளவு பாதிப்பு உள்ள அறிவொளி நகருக்குள் எந்த அதிகாரியும் வந்து பார்க்கவில்லை. இடிந்த வீடுகளை, குடிசைகளை சீரமைக்க முடியாமல் பிளாஸ்டிக் சீட்டுகள் மூலம் கொட்டகை அமைத்தும் இடிந்த வீடுகுளின் மேல் தார்பாய் பொருத்தியும் வைத்து எஞ்சிய பொருட்களை பாதுகாத்தாலும் தங்க இடமின்றி மரத்தடியிலும், தெரு ஓரங்களிலும் தூங்குகின்றனர். நிவாரணமாக அவர்களுக்கு பழைய துணிகளே கிடைத்துள்ளது. அதிலும் பல கிழிந்த துணிகள். அவற்றை பிரித்து பலரும் உடுத்தி வருகின்றனர்.

     

people of Keeramangalam who live in the street for 30 days

இது குறித்து பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கூறும் போது.. 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கட்டிக் கொடுத்த வீடுகளும் உடைந்து விட்டது. தற்போது எஞ்சி இருந்த வீடுகளும் புயலுக்கு உடைந்து கொட்டிவிட்டது. எங்களை யாரும் வந்து பார்க்கவும் இல்லை அரசு நிவாரணம் எதுவும் கிடைக்கவும் இல்லை. எங்கள் வீடுகளை அரசாங்கம் சீரமைத்து கொடுத்தால் மழைகளில் இருந்து எங்கள் குழந்தைகளை காப்பாற்ற முடியும். இல்லை என்றால் மழைக்கும் மரத்தடியில்தான் இருக்க வேண்டும். மழையிலும், பனியிலும் நனைந்து குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. நிவாரணம் கொடுப்பதுடன் எங்கள் தொழிலுக்கு பாசி மணி விற்கவும் உதவிகள் செய்ய வேண்டும் என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.