
கலைஞருக்கான பேனா நினைவுச்சின்னத்தை அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் தமிழக அரசு கருத்து கேட்க உள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். தற்போது கலைஞருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க நடுக்கடலிலும் 81 கோடி ரூபாய் செலவில் 134 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னத்தை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை அடுத்து பொதுமக்களின் கருத்தை கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதனை ஒட்டி கருத்துக்கேட்புக் கூட்டம் அடுத்த மாதம் (ஜனவரி) 31 அன்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் காலை 10 மணியளவில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.