Skip to main content

"பழனி கோயில் திருப்பதிக்கு நிகராக மாற்றப்படும்"-  ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேச்சு! 

Published on 03/08/2022 | Edited on 03/08/2022

 

"Palani temple will be made equal to Tirupati"- IP Senthilkumar MLA. Speech!

 

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள  திருமண மண்டபத்தில் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (02/08/2022) நடந்தது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை வகித்தார். கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், நகராட்சி ஆணையர் கமலா ஆகியோர் முன்னிலை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் வரவேற்றுப் பேசினார். 

 

வருவாய்த்துறை சார்பில் 1,688 பயனாளிகளுக்கு ரூபாய்  17.93 கோடி மதிப்பிலும், கூட்டுறவுத்துறை சார்பில் 592 பயனாளிகளுக்க ரூபாய் 3.41 கோடி மதிப்பிலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 184 பயனாளிகளுக்கு ரூபாய் 30 லட்சம் மதிப்பிலும், நகராட்சி சார்பில் ரூபாய் 1.86 கோடி மதிப்பீடு உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் 2 ஆயிரத்து 838 பயனாளிகளுக்கு ரூபாய் 24.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார். 

 

விழாவில் பேசிய ஐ.பி.செந்தில்குமார், "தமிழகத்தில் மக்களுக்கான அரசாட்சி நடந்து வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு 14 மாதங்களில் லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழில் முனைவோருக்கு ஏற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளது. மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் தி.மு.க. அரசு முனைப்பாக உள்ளது. பழனி கோயிலை திருப்பதிக்கு நிகராக மாற்றும் வகையில் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவிக்க உள்ளார்.

 

பழனி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த சித்த மருத்துவக் கல்லூரிக்கான பணி விரைவில் துவங்கப்பட உள்ளது. வையாபுரி குளத்தை சீரமைத்து படகு குழாம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.பழனி சட்டமன்றத் தொகுதியில் தேவையான இடங்களில் தற்போது புதிய ரேசன் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

 

பழனி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ரூபாய் 70 கோடியில் நவீனப்படுத்தப்பட உள்ளன. விரைவில், இதற்கான பணிகள் தொடங்க உள்ளன" என்று கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.