Skip to main content

முதல்வர் குறித்து தரக்குறைவான விமர்சனம்... ஒருவர் கைது;பேராசிரியருக்கு வலைவீச்சு!

Published on 07/05/2020 | Edited on 07/05/2020
One arrested, Chidambaram Professor

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காயத்ரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வீரப்பிள்ளை என்பவரது மகன் விஜயன். இவர் அவருடைய முகநூல் பக்கத்தில் தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமியை பற்றி தரக்குறைவாகவும், அவரது புகழை கெடுக்கும் விதமாகவும் விமர்சனம் செய்து வந்ததாக தெரிகிறது. அதேபோல சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மேலாண்மை துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் ராஜ் ராதாகிருஷ்ணன். இவரும் தனது முகநூல் பக்கத்தில் அதேபோல தமிழக முதல்வரை பற்றிய அவதூறாகவும், அவரது மரியாதையை குறைக்கும் வகையிலும் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து தகவலறிந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை கழக பேச்சாளர்  தில்லை கோபி சம்பந்தப்பட்ட விஜயன் வீட்டிற்கு சென்று இது குறித்து கேட்டுள்ளார். அப்போது தில்லை கோபி உள்ளிட்ட கட்சியினரை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


இதுகுறித்து  சிதம்பரம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.  அதில் தமிழக முதல்வரைப் பற்றி தரக்குறைவாக முகநூல் பக்கத்தில் விமர்சனம் செய்த விஜயன் மற்றும் ராஜ் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவர் மீதும் நீங்கள் தக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். இந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட சிதம்பரம் காவல்துறையினர், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்ட காயத்ரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விஜயன் என்பவரை கைது செய்தனர். பேராசிரியர் ராதாகிருஷ்ணனை தேடி வருகின்றனர். முகநூல் பக்கத்தில் முதல்வரைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த விஜயன கைது செய்ததும், பேராசிரியரை தேடி வருவதும்  சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்