அக். 2ம் தேதி, காந்தி பிறந்தநாள் அன்று, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடக்கிறது.
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் அக்டோபர் 2ம் தேதி, காந்தி பிறந்தநாள் அன்று, கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது செலவினம், திட்டப்பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்;
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் குறித்த கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), குடிநீர் இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த மற்றும் சாராத தொழில்கள், ஊரக விளையாட்டு மேம்பாடு;
அமிர்தகுளம், பசுமை தமிழ்நாடு, நெகிழி ஒழிப்பு மற்றும் மாற்று, கனவுப்பள்ளிகள், கிராமத்தில் எழுத்தறிவு நிலை, ஆண், பெண் பிறப்பு விகிதம், தற்போது கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சிப் பணிகள் விவரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும், அரசின் பிற திட்டங்கள் குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.