Skip to main content

உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை! –தமிழக அரசு விளக்கம்!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020
chennai high court

 

 

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றியது.

 

இந்த இடஒதுக்கீடு சலுகையை பெற, சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடமிருந்து சொத்து மற்றும் வருமான சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்வு வகுப்பினருக்கு, சொத்து மற்றும் வருமான சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி, தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி,  தமிழ்நாடு பிராமணர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் சார்பில்,  தனி நபர்கள் சார்பில்,  உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

 

இந்த வழக்குகள்,  நீதிபதிகள்  எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சொத்து மற்றும் வருமானச் சான்றிதழ்கள் வழங்க வேண்டாம் என்று பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றுள்ளோம். இந்த சான்றிதழ்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கும், மத்திய அரசின் வேலை வாய்ப்புக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நிபந்தனை விதித்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

ஆனால், மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் வேலை வாய்ப்புகளுக்கு மட்டுமே இந்த சான்றிதழ்களை பயன்படுத்த முடியும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும்.  பிற மாநிலங்களில் இந்த சான்றிதழ்களை பயன்படுத்த அனுமதிக்கும் படி உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

இதற்கு பதிலளித்த தமிழக அரசு, தமிழகத்தில் வழங்கப்படும் சொத்து மற்றும் வருமானச் சான்றிதழ்களை பிற மாநிலங்களில் பயன்படுத்துவது குறித்து அந்தந்த மாநிலங்கள்தான் முடிவு செய்ய முடியும் என விளக்கம் அளித்தது.

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக,  தமிழகத்தில் வழங்கப்படும் சொத்து மற்றும் வருமானச் சான்றிதழ்களை பிற மாநிலங்களில் பயன்படுத்துவது தொடர்பாக,  அந்தந்த மாநிலங்கள்தான் முடிவு செய்ய முடிவு செய்ய முடியும் எனக்கூறி இந்த வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்