Skip to main content

BREAKING : நீதிமன்றம் வந்த நிர்மலா தேவியிடம் நக்கீரன் கேட்ட கேள்விகள்... அவரது பதில்!  

Published on 01/11/2018 | Edited on 01/11/2018
Nirmala Devi Issue


இன்று (01-11-2018) ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட நிர்மலாதேவி, பத்திரிகையாளர்கள் அவரை நெருங்கிவிடாதபடி கடும் கட்டுப்பாட்டுடன் விறுவிறுவென அழைத்துச் செல்லப்பட்டார். 
 

பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இருவரும் இதற்கு முன்பு நீதிமன்றத்துக்கு வந்தபோது பத்திரிகையாளர்களிடம் பேச முயன்றனர். போலீஸைத் தாண்டி பேசினர். ஆனால், நிர்மலாதேவி மிகவும் இறுக்கமாக பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசாமலேயே இருந்தார். 
 

அவரை அழைத்து வந்த காவலர்கள் முன்னே கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டும், பின்னே அவரைப் பிடித்து தள்ளிக்கொண்டும் சென்றனர். இத்தகைய நெருக்கடிக்கிடையே யாரும் நிர்மலாதேவியை எளிதில் அணுக முடியாமல் இருந்தது. 
 

இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு அவர் கொண்டுவரப்பட்டு வாகனத்திலிருந்து நீதிமன்றத்துக்குள் அழைத்துச் செல்லும் பாதையில் ஏற்பட்ட குழப்பத்தால் ஏற்பட்ட சிறிய இடைவெளியில் நிர்மலாதேவியை நெருங்கினோம்.
 

"முருகன், கருப்பசாமி ஆகியோர் தங்கள் தரப்பு கருத்தை பத்திரிகையாளர்களிடம் சொன்னார்கள், ஆனால் நீங்கள் இதுவரை எதுவுமே வாய்திறக்கவில்லையே?" என்று கேட்டோம். கோபமடைந்த காவலர்கள், "எதுவும் பேசாதீங்க சார்..." என்று நம்மை தடுத்தார்கள். "கேள்வி கேட்பதில் என்ன மேடம் தவறு? நீங்க ஏன் அவரைப் பேசவிடமாட்டேன்றீங்க?" என்று கூறி நிர்மலாதேவியைத் தொடர்ந்தோம்.
 

 "சொல்லுங்க... நீங்கள் கொடுத்த வாக்குமூலம் முற்றிலும் பொய்யானது என்று முருகன் கூறியுள்ளார், உங்கள் பதில் என்ன? சிறைக்குள் நீங்கள் புலம்புவதாகக் கேள்விப்பட்டோம், வெளியில் சொல்ல என்ன தயக்கம்? வேறு இடத்திலிருந்து உங்களுக்கு அழுத்தம், மிரட்டல் வருகிறதா?" என்று கேட்டுக்கொண்டே நாம் பின்னே செல்ல, இதுவரை பத்திரிகையாளர்களை நிமிர்ந்தும் பார்த்திராத வகையில் கொண்டு செல்லப்பட்ட  நிர்மலா தேவி, திரும்பி நம்மை பார்த்தார். 
 

அவரது பார்வையில் இறுக்கம், சோகம், எதையோ சொல்ல விரும்பி சொல்ல முடியாத தவிப்பு அனைத்தும் சேர்ந்து மெளனமாக வெளிப்பட்டது. அந்த மௌனத்துக்குள் பல பெரிய  உண்மைகள் உறைந்து மறைந்து இருப்பதை நம்மால் உணர முடிந்தது. அவரை வாய் பேச விடாமல் கூட்டிச் சென்றுவிட்டது காவல்துறை.     
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கு; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Nirmala Devi case; The High Court barrage of questions

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாக கமிட்டிக்கு அனுப்பி இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை 6 ஆண்டுகளாக விசாக கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை. நிர்மலா தேவி வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன். இது குறித்து ஜூன் 7 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Next Story

“போராட்டம் நடத்துவோம்..” - அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் போர்க்கொடி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 professors have said they will stage a struggle  if they are not given promotion

தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்து, திருச்சி உள்ளிட்ட 13 பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு மட்டும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கப்படுவதாகவும் மற்ற 13 உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்குப் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. 

இது தொடர்பாக, அனைத்து பேராசிரியர்களுக்கும் இணையான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்க வலியுறுத்தி திருச்சியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில், (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் கழக திருச்சி கிளை சார்பில்) முதல்வரிடம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவர் பிரபாகரன், செயலாளர் உதயகுமார் தலைமையில் பேராசிரியர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தைத் திங்கள்கிழமை வழங்கியுள்ளனர்.

உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்குக் கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெறும் என்றும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோல், பட்டுக்கோட்டை, பண்ருட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில், திருக்குவளை, விழுப்புரம் உள்ளிட்ட 13 உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்களும் (தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கழகம் சார்பில் அந்தந்த கல்லூரியின் முதல்வர்களிடம்) கோரிக்கை கடிதங்களை வழங்கியுள்ளதாகப் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.