Skip to main content

சாலைப்பணியாளர் சடலத்தை ஒன்றரை மணி நேரம் வாசலிலேயே நிறுத்திய அலட்சிய அரசு மருத்துவமனை!

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

The negligent pattukottai government hospital

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா புள்ளாண்விடுதி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த புண்ணியநாதன். சாலைப்பணியாளரரான இவரும் இவர் மனைவி ஷோபனாவும் திங்கள் கிழமை மாலை தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் செருவாவிடுதி கிராமத்தில் உள்ள தங்கள் உறவினர் வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மீண்டும் புள்ளாண்விடுதிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகில் உள்ள பூவரசக்குடி கிராமத்தைச் சேர்ந்த இருவர் சென்ற கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்ட சாலைப்பணியாளர் புண்ணியநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

 

விபத்து ஏற்படுத்திய இருவர் தப்பிச் சென்றுவிட்டனர். படுகாயமடைந்த ஷோபனா ஆபத்தான நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் அங்கிருந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

The negligent pattukottai government hospital

 

தொடர்ந்து ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இறுதி ஊர்வலத்தில் சடலம் ஏற்றும் வாகனத்தில் சாலைப்பணியாளர் புண்ணியநாதன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு விபத்தில் இறந்தவரின் சடலம் பிரேதப்பரிசோதனைக்கு கொண்டுவரப்படும் தகவலை போலீசார் தெரிவிக்கவில்லை என்று அரசு மருத்துவமனை நுழைவாயிலிலேயே புண்ணியநாதன் சடலத்தை ஏற்றி வந்த வாகனத்தை சுமார் ஒன்றரை மணி நேரம் இறக்க அனுமதிக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து புண்ணியநாதன் உறவினர்கள் மருத்துவமனையில்  திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உறவினர்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். அதன்பிறகு சடலம் பிணவறையில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.

 

The negligent pattukottai government hospital

 

விபத்தில் இறந்த ஒருவரின் சடலத்தை போலீசார் தகவல் சொல்லவில்லை என்பதால் வாகனத்திலேயே நிண்ட நேரம்  நிறுத்தி வைத்திருந்த அவலமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் உறவினர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்