Skip to main content

நீட் தேர்வு ஓம்.எம்.ஆர். விடைத்தாள் முறைகேடு: விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! 

Published on 11/12/2020 | Edited on 11/12/2020

 

NEET EXAM OMR ANSWER SHEET CHENNAI HIGH COURT NATIONAL TESTING AGENCY

நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஓ.எம்.ஆர் (OMR) விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா என விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய தேர்வு முகமைக்கு (National Testing Agency) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நீட் தேர்வு நடந்து முடிந்த பின், அக்டோபர் மாதம் 5- ஆம் தேதி, தேசிய தேர்வு முகமை, அதன் இணையதளத்தில் ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை வெளியிட்டது. இதில், முதலில் 700 க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாகக் காட்டிய நிலையில், அக்டோபர் 17- ஆம் தேதி, திடீரென தன் மதிப்பெண்களை 248 ஆகக் குறைத்து ஓ.எம்.ஆர். வெளியிடப்பட்டதாக, கோயம்புத்தூரைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் சார்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

அந்த மனுவில், 594 என்பதையே தன் நீட் மதிப்பெண் எனக் கணக்கிட்டு, மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமெனக் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நடைபெற்றபோது, நீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய தேர்வு முகமை சார்பில், மாணவரின் அசல் ஒ.எம்.ஆர் விடைத்தாள், சம்மந்தப்பட்ட மாணவரிடம் காண்பிக்கப்பட்டது. அசல் விடைத்தாளில், அக்டோபர் 17- ஆம் தேதி இணையதளத்தில் காட்டியதாகக் கூறப்படும் 248 மதிப்பெண்ணை மாணவர் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

 

சந்தேகம் தீர்ந்ததாக நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வந்த நிலையில், சம்மந்தப்பட்ட மாணவர், தன் கூகுள் கணக்கில் இருந்து மீட்டெடுத்த தரவுகளை அடிப்படையாகக்  கொண்ட கூடுதல் பதில் மனுவைத் தாக்கல் செய்தார். அத்துடன் சேர்த்து, அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் எடுத்த, 594 மதிப்பெண் எனக் காட்டிய ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்களும், மாணவர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டது.

 

மாணவரின் இந்தத் தரவுகள் சந்தேகத்தைக் கிளப்புவதாகத் தெரிவித்த நீதிபதி, ‘அக்டோபர் மாதம் 5- ஆம் தேதி முதல் 16- ஆம் தேதி வரை காட்டப்பட்ட 594 மதிப்பெண்கள், திடீரென அக்டோபர் 17- ஆம் தேதி 248 ஆகக் குறைந்தது எப்படி? மின்னணு முறையிலான இது போன்ற விவகாரங்களில்,  யாரும் திருத்தம் செய்யவோ, ஊடுருவவோ முடியாது என்பதை அரிதியிட்டுச் சொல்ல முடியாத சூழல் நிலவுகிறது. அது சாத்தியம் எனும் பட்சத்தில், இது மிகப்பெரிய ஆபத்தாகும். அதனால், உடனடி விசாரணை தேவைப்படுகிறது.  

 

ஓ.எம்.ஆர் விடைத்தாளில் திருத்தம் செய்ய முடியும் எனும் பட்சத்தில், இது ஒட்டுமொத்த தேர்வு முறையிலும் சிக்கலை ஏற்படுத்தும். இதில், எதிர்கால மருத்துவர்களும், எண்ணற்றோர் வாழ்வும் சம்பந்தப்பட்டுள்ளது. ஒரே மாணவருக்கு இரண்டு விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது, மதிப்பெண் எப்படி வேறுபட்டது என்பது தொடர்பாக, சம்மந்தப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, விரிவாக விசாரணை நடத்தி, சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.’ எனத் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

தற்போதைய நிலையில், மாணவர் முதலில் பெற்றதாகக் கூறும் 594 மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு, அவரை மருத்துவ கவுன்சிலிங்-ல் பங்கேற்க அனுமதிக்கும்படி, மருத்துவக் கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அவருக்கு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்கும் பட்சத்தில், அதை இறுதி செய்யக் கூடாதென்றும், அது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் தெரிவித்து,  விசாரணையை வரும் டிசம்பர் 23- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” - உயர்நீதிமன்றம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ban on using OPS aiadmk symbol will continue says Madras High Court

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு பல கட்ட விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த 18 ஆம் தேதி, “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதா இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால்,  அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை தனக்கு கட்சியின் இரட்டை இலை, சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, “அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது; ஓ.பி.எஸ். இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மேல்மூறையீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகத் தடையில்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.