Skip to main content

நிறுத்தப்பட்ட பணிகளைத் துவங்கும் ஓ.என்.ஜி.சி... எதிர்ப்புத் தெரிவிக்கும் பொதுமக்கள்!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

 

NAGAI DISTRICT ONGC ISSUES FARMERS

 

நாகை அருகே உள்ள ஓ.என்.ஜி.சி ப்ளாண்டில் ஏற்கனவே பணிகள் நிறுத்தப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டுமானப் பொருட்களை இறக்கி ரகசியமாக பணிகளைத் தொடங்கியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

 

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குருவாடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. என்கிற பொதுத்துறை நிறுவனம் கடந்த 2010- ஆம் ஆண்டு பூமியில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க ஆழ்துளை கிணறுகளை அமைத்தது. அதனை பொதுமக்கள் கடுமையாக எதிர்த்ததால் 2012- ஆம் ஆண்டு மூடினர். பிறகு கிடப்பில் போடப்பட்ட பணிகளை மீண்டும் துவங்க இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து, கடந்த 2017- ஆம் ஆண்டு குருவாடி, அண்ணா மண்டபம், திருச்செங்காட்டங்குடி உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதாகினர். 

 

NAGAI DISTRICT ONGC ISSUES FARMERS

 

அதன்பிறகு, கடந்த 2014- ஆம் ஆண்டு ஓ.என்.ஜி.சி. நிர்வாகத்திற்கும் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தை முடிவில் ஹைட்ரோகார்பனோ, எண்ணெய் எரிவாயுவோ, மீத்தேனோ என எந்தப் பணிகளும் குருவாடி கிராமத்தில் நடைபெறாது, என ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக விவசாயிகளிடம் உறுதி அளித்தது. 

 

இந்தச் சூழ்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு கரோனா ஊரடங்கு உத்தரவை பயன்படுத்திக்கொண்ட ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகள் குருவாடி கிராமத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் ரிக் அமைக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அந்த இடத்தில் இருந்த கருவேல மரங்களை அகற்றி, கருங்கல், மண், செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை இறக்கி, பில்லர் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்து அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

 

NAGAI DISTRICT ONGC ISSUES FARMERS

 

பணிகள் நிறுத்தப்பட்டு இருப்பதாக ஓ.என்.ஜி.சி.நிர்வாகம் கூறியுள்ள நிலையில் திடீரென கட்டுமானப் பொருட்கள் இறங்குவதற்கான காரணம் என்ன? கான்கிரீட் வேலைகள் நடைபெற்று இருப்பதற்கான காரணம் என்ன? என்பன உள்ளிட்ட கேள்விகளை அப்பகுதி விவசாயிகள் எழுப்பியுள்ளனர். மேலும், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், ஆபத்தான பணிகளை ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் நிறுத்த வேண்டும், இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்கிறார்கள் விவசாயிகள்.

 

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளோ, "குருவாடி கிராமத்தில் போடப்பட்டிருக்கும். ஆழ்துளை கிணற்றில் எந்தவிதமான எரிவாயுவும் கிடைக்கவில்லை. அந்தப் பகுதியில் போடப்பட்டிருக்கும் எரிவாயு எடுப்பதற்கான இயந்திரங்களை அகற்றப்படுவதற்கான வேலைகள் மட்டுமே நடைபெறுகிறது." என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.