தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காதலனே கொலை செய்தது தெரியவந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, நடுக்காவேரி அடுத்த மனக்கரம்பை பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகள் அபிராமி. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அபிராமி வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். இது தொடர்பாக நடுக்காவேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், ராமலிங்கம் என்பவரின் மகன் முகேஷ் என்பவர் கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரிடம் சரணடைந்துள்ளார். உடனே அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், முகேஷும் அபிராமியும் சென்னையில் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்த பொழுது காதலித்து வந்தது தெரிந்தது. கடந்த 19 ஆம் தேதி இருவரும் சொந்த ஊரான மனக்கரம்பைக்கு வந்துள்ளனர். அப்பொழுது அபிராமி வீட்டில் தனியாக இருந்த பொழுது, முகேஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அபிராமியிடம் கேட்டுள்ளார். ஆனால் அபிராமி மறுத்ததால் ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பலமுறை தாக்கிக் கொலை செய்துள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொலை செய்த முகேஷ் எப்படியும் மாட்டி விடுவோம் என நினைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.