Skip to main content

''என் காதலி ஒருநாள் வருவாள்...'' 20 ஆண்டுகளாக வழிமேல் விழி வைத்து உட்கார்ந்த நிலையிலேயே காத்திருக்கும் உண்மைக் காதலன்...!

Published on 08/08/2021 | Edited on 10/08/2021

 

love

 

இன்றைய காதல் நொடியில் மாறிவிடுகிறது. ஆனால் இன்னும் பல உண்மையான காதல்களும் இருக்கத்தான் செய்கிறது. காதலி வேறு இடத்தில் திருமணம் செய்துவிட்டால், காதலித்த நேரத்தில் நிகழ்ந்த சந்தோசங்களை நினைத்துத் தனியாகவே வாழும் பலர் இருக்கிறார்கள். ஆனால் மற்றொருபக்கம், இனக்கவர்ச்சியால் உருவாகும் காதல் அடிக்கடி ஆளை மாற்றிக்கொண்டேதான் இருக்கிறது.

 

இப்படியான நிலையில்தான் ஒரு உண்மையான காதலன் 20 வருடங்களாக தன் காதலி வருவார் என்று வழிமேல் விழி வைத்து சாலையோரக் குன்றின் மேல் புயல், மழை, வெயில், காற்று எதுவானாலும் வேறு எங்கேயும் போகாமல் உட்கார்ந்த நிலையிலேயே காதலியின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

 

love

 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மூலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகாயி (70). இவரது கடைசி மகன் நாகராஜன் (40) கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பள்ளிப்படிப்பை முடித்ததோடு குடும்ப வறுமையைப் போக்க கோவைக்குச் சென்று, அங்குள்ள ஒரு மளிகைக் கடையில் வேலை செய்தபோது கேரளாவைச் சேர்ந்த பெண் மீது காதல் வர, அண்ணன்கள், சகோதரிகளுக்கு திருமணமானதும் நாம் திருமணம் செய்துகொள்வோம் என்று காதலியைத் தனது சொந்த ஊரான மூலங்குடிக்கு அழைத்து வந்துவிட்டார். அவர் அழைத்துவந்த தகவலறிந்து காதலியின் உறவினர்கள் படையோடு காரில் வந்து, அவரது காதலியை அழைத்துச் சென்றுவிட்டனர். நாகராஜனை பிரிய மனமின்றி கண்ணீரோடு பெற்றோருடன் சென்றுவிட்டார் காதலி. 20 வருடங்களுக்கு முன்பு நடந்தது இந்த சம்பவங்கள்.

 

love

 

அதன்பிறகு தன் காதலி எப்படியும் வந்துவிடுவார் என்று சாலையிலேயே நின்று பார்த்தவர், அடுத்த சிலநாட்களில் தனது ஊருக்கு வரும் சாலையில் வீட்டிலிருந்து 2 கி.மீ தூரத்தில் சாலையோரம் உள்ள சிறிய குன்றின் மேல் அமர்ந்தவர், தனது தாய் அழைத்தும் வரவில்லை. அதன் பிறகு புயல், மழை, வெயில், காற்று இப்படி இயற்கை சீற்றங்கள் வந்தபோதும் கூட மாற்று இடம் தேடி போகவில்லை. அதே பாறையில் அதே இடத்தில் அமர்ந்த நிலையிலேயே இருக்கிறார். மழையை சமாளிக்க பல வருடங்களுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த தென்னங்கீற்று சம்மங்கூடுகளும் சாக்கு பைகளுமே பயன்படுத்திவருகிறார். 100 நாள் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் கவனிக்கும் அவரது 70 வயது தாய், தினசரி உணவுகளைக் கொண்டுவந்து வைக்கிறார். ஆள் இல்லாத நேரத்தில் அருகில் உள்ள கண்மாய் தண்ணீரை வாட்டர் பாட்டில்களில் எடுத்து வந்து குடிக்கவைத்திருக்கிறார்.

 

love

 

இப்படியே காதலியின் வருகைக்காக 20 வருடங்களாக யாரிடமும் பேசாமல் காத்திருந்ததால் தற்போது மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து மாவட்ட மனநல திட்டம் ஊழியர்கள், போலீசார் மற்றும் வருவாய் துறையினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 20 வருடங்களாக காதலியின் வரவை நோக்கி உட்கார்ந்தே இருந்த காதலனால் உண்மைக் காதல் வெளிப்படுகிறது.

 

அவரது அம்மா நாகாயி.. ''எனக்கும் வயசாகிடுச்சு 100 நாள் வேலை செஞ்சு இதுவரை சோறு போட்டேன். அவனுக்குப் பல இடங்களில் வைத்தியம் பார்த்தோம். இனிமேலாவது நல்ல முறையில சிகிச்சை கொடுத்து என் மகன் என்னோட திரும்பி வர வைக்கனும். ஏதாவது அரசாங்க உதவி கிடைத்தால் உதவியாக இருக்கும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்