
சேலத்தில் மர்மமான முறையில் இறந்த ஆட்டோ ஓட்டுரின் சடலத்துடன் இரண்டு நாட்களாக வீட்டுக்குள்ளேயே அவருடைய தாயார் இருந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் உமாசங்கர் (45). ஆட்டோ ஓட்டுநர். இவருடைய மனைவி கடந்த 15 ஆண்டுக்கு முன்னர் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் உமாசங்கர் தனது தாயார் ராஜேஸ்வரியுடன் வசித்து வந்தார். ராஜேஸ்வரி சற்று மனநலம் பாதித்தவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவருடைய வீடு இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் பள்ளப்பட்டி காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
காவல்துறையினர் ராஜேஸ்வரி வீட்டுக்கு விரைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, உமாசங்கர் படுக்கையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. சடலத்தை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உமாசங்கர் இரு நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என கருதுகின்றனர். மகன் இறந்தது கூட தெரியாமல் அவருடைய தாயார் வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.