
கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 46 வயது சின்னசாமி. இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள்கள் சுமதி, சுஜாதா ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இருந்தும் கடந்த சில நாட்களாக இரண்டு பேருமே பெற்றோர் வீட்டிற்கு வந்து வசித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் சின்னசாமியும் அவரது மனைவி செல்வியும் வயல் வேலைக்குச் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் அவர்களது இளையமகள் சுஜாதாவும் காய்கறி வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சுமதி, அரிவாளால் தனது கை மற்றும் தலைப்பகுதிகளில் தனக்குத்தானே வெட்டி காயப்படுத்திக் கொண்டதோடு தன் மீதும் தனது ஒன்றரை வயது பெண்குழந்தை ஸ்ரீநிதி மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போது வெளியில் சென்று திரும்பி வந்த சுஜாதா, தன் தங்கையின் செயலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சல் போட்டுள்ளார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து, சுமதியையும் அவரது குழந்தையும் ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சையளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு செல்லும் வழியிலேயே (நேற்று காலை) சுமதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குழந்தை ஸ்ரீநிதிக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
சுமதி எதற்காக தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் என்பது பற்றி குடும்பத்தினருக்குத் தெரியவில்லை என்கிறார்கள். மேலும், இதுகுறித்து சுமதியின் தந்தை சின்னசாமி வரஞ்சரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராசு வழக்குப் பதிந்து சுமதி இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார். மேலும், சுமதிக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆவதால் கள்ளக்குறிச்சி சப் கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் டி.எஸ்.பி இராமநாதன் ஆகியோர் சுமதி இறப்பு குறித்து மேல் விசாரணை செய்து வருகின்றனர். சுமதி தன் மீதும் தன் குழந்தை மீது மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அசகளத்தூர் கிராம மக்களிடம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.