Skip to main content

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எம்.எல்.ஏ.க்கள்! வெள்ளப் பாதிப்பு முகாமில் சுவாரசியம்! 

Published on 08/08/2022 | Edited on 08/08/2022

 

MLAs put an end to the rumours! Interesting in the flood affected camp!

 

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் கடந்த மூன்று தினங்களாக சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் வழியாக வங்கக்கடலில் கலந்து வருகிறது. சுமார் 2.10 லட்சம் கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றில் செல்வதால் ஆற்றின் இரு கரையோர பகுதியையும் தண்ணீர் தொட்டுச் செல்கிறது. கரையோர கிராமங்களான நாதல்படுகை கிராமத்தில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால், அப்பகுதியில் உள்ள மக்களை நாதல்படுகைக்கு அருகே உள்ள அனுமந்தபுரம் அரசுப் பள்ளி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

 

மேலும் அவர்களுக்கு வேண்டிய உணவு அங்கேயே சமைத்துப் பரிமாறப்படுகிறது. இன்று மூன்றாவது நாளாக வெள்ளப் பாதிப்புகளைப் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா முருகனும், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வமும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும், மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொடுத்தனர். முகாமில் தங்கியிருக்கும் மக்களுக்கு சமைத்து வரும் உணவின் தரம், சுவை ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஒரே தட்டில் ஒன்றாக உணவினை சாப்பிட்டு உணவின் தரத்தைச் சோதனை செய்தனர். இதனை அங்கிருந்த பொதுமக்கள் கண்டு நெகிழ்ந்தனர்.

 

"திமுக மாவட்டச் செயலாளரும் பூம்புகார் எம்.எல்.ஏவுமான நிவேதா முருகனுக்கும், சீர்காழி திமுக எம்.எல்.ஏ  பன்னீர்செல்வத்துக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது எனப் பரவலாக இருந்த பேச்சுக்கு, அப்படி இல்லை என்பதற்கு ஒரே தட்டில் உணவு உண்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்" என்கிறார்கள் திமுகவினரே. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சீர்காழியில் கரையொதுங்கிய மர்மப்பொருள் வெடிக்க வைத்து அழிப்பு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Detonation of mysterious object washed ashore in Sirkhazi

சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதனை பாதுகாப்புடன் வெடிக்கவைத்து அழிக்கப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நாயக்கர்குப்பம் மீனவ கிராமப் பகுதியில் கடந்த 12 ஆம் தேதி 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில மொழியில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று கரை ஒதுங்கியது. பார்ப்பதற்கு கேஸ் சிலிண்டர் போன்ற அமைப்பில் இருக்கும் அந்த மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இது தொடர்பாக அந்தப் பகுதி மீனவர்கள் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். சுமார் ஒன்றரை அடி நீளமும் 6 அங்குலம் விட்டமும் கொண்ட அந்த உருளை குறித்து விசாரணை செய்யப்பட்டதில், ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்ஞைகளை வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் இது என்பது எனத் தெரியவந்தது. இருப்பினும் அந்தப் பொருளை யாரும் தொட வேண்டாம் என தடுப்பு அமைத்து சென்றனர் போலீசார்.

Detonation of mysterious object washed ashore in Sirkhazi

இந்நிலையில் நீர்மூழ்கி கப்பலில் பயன்படுத்தப்படும் அந்த கருவியானது வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் பாதுகாப்பாக வெடித்து அழிக்கப்பட்டது. இதற்காக பெரிய அளவில் குழி தோண்டப்பட்டு அதனுள் அந்த கருவியை வைத்து வெடிக்க வைக்கப்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் மக்கள் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பிற்காக போலீசாரும் இருந்தனர்.

Next Story

மாணவர்களிடம் ஜூஸ் வாங்க சொன்ன ஆசிரியர்; அதிரடி காட்டிய சிஇஓ

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

 A CEO takes action who The teacher asked the students to buy juice

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த பள்ளியில் நேற்று முன் தினம் (19-10-23) பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், மாணவர்கள் 4 பேரை அழைத்து கடைக்கு சென்று தனக்கு பழஜூஸ் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.அதனை ஏற்று அந்த 4 மாணவர்களும் ஜூஸ் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளனர்.

 

அப்போது அந்த வழியாக காரில் வந்து கொண்டிருந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ) அம்பிகாபதி, பள்ளி நேரத்தில் மாணவர்கள் கடைக்கு செல்வதை பார்த்துள்ளார். அதையடுத்து, தான் வந்த காரை நிறுத்தி மாணவர்களை அழைத்தார். மேலும், அவர்களிடம், பள்ளி நேரத்தில் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டு விசாரித்தார். அதற்கு மாணவர்கள், ஆசிரியர் ஜூஸ் வாங்க அனுப்பியதாக தெரிவித்தனர். 

 

இதனை தொடர்ந்து, முதன்மை கல்வி அலுவலர், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரித்தார். அப்போது, ஆசிரியர் மாணவர்களை ஜூஸ் வாங்க அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஆசிரியருக்கு ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யும்படி தலைமை ஆசிரியரிடம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு சென்றார்.