புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கல்வித்துறை சம்பந்தமாக அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவது தொடர்பாக அவசர ஆய்வுக்கூட்டம், ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.
அந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், தான் 10 ஆண்டுகள் சேர்மனாக இருந்த நினைவுகளோடு பழைய ஞாபகங்களை மறக்காமல், தான் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக இருந்த அலுவலக அறைக்குச் சென்று, பெருந்தலைவர் இருக்கையைப் பார்த்தவர், ‘சேர் நல்லா இருக்கே...’ என்று அந்த இருக்கையில் அமர்ந்து நெகிழ்ந்தார். பழைய ஞாபகங்களை சக ஒன்றியக் குழு நிர்வாகிகளிடம் பகிர்ந்து கொண்டார்.
இந்த இருக்கையில் இருந்து தான் ஒன்றியத்தில் உள்ள மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆலோசிப்போம். ஏராளமான மக்கள் நலத்திட்டங்களுக்கு இதிலிருந்து தான் கையெழுத்திட்டேன் என்றார். பழைய நினைவுகளோடு அமைச்சர் செய்த செயல் ஒன்றிய அலுவலகத்தில் அனைவரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.