Skip to main content

“மீண்டும் மிசா வரும்” - அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Minister Duraimurugan warns that misa will come again

வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் அறிவித்ததையடுத்து இன்று குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.

அப்போது, “பிரதமர் மோடி வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார். ஆனால் நாங்கள் தியாகம் செய்ததைபோல் அவர்கள் செய்துள்ளார்களா? நாங்கள் தியாகத்திலேயே வளர்ந்தவர்கள். மிசாவில் நான் கைதான போது எனது காலரை எனது ஒரு வயது மகன் கதிர் ஆனந்த் பிடித்துக் கொண்டான். அந்தப் பிஞ்சு கையை காவல்துறையினர் தூக்கி எறிந்து என்னை கைது செய்து சென்றார்கள். அதற்குப் பிறகு மூன்று மாத காலம் அவர்களை பார்க்க முடியவில்லை. மூன்று மாதம் கழித்து எனது மனைவி எனது ஒரு வயது மகன் கதிரானந்தை சிறைக்கு அழைத்து வந்தார்.

அவனைப் பார்த்தபோது கட்டித் தழுவி கொள்ளலாம் என ஏங்கினேன். கட்டி தழுவ முயற்சித்த போது அங்கு இருந்த காவலர் ஒருவர் நீ குற்றவாளி குழந்தையை தொடக்கூடாது. நீ அவனை ஏதாவது (கொலை) செய்து விடுவாய் என கூறி தடுத்துவிட்டார். நானா எனது மகனை ஏதாவது செய்து விடுவேன் என அப்போதே கண் கலங்கினேன். எனது மகன் கையை நீட்டி அப்பா... அப்பா... என கூறினான்.

அதற்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்து ஒரு வருட காலம் எனது மகனை நான் தொட்டதே இல்லை. அந்த அளவுக்கு வலியை அனுபவித்தவர்கள் நாங்கள்” என கண் கலங்கி நா தழுதழுத்த குரலில் பேசினார்.

எங்களைப் பார்த்து வாரிசு அரசியலென மோடி பேசுகிறார். மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கி இந்தியா போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் ஜனநாயகக் குரல் வலையை நெரிக்கும் காரியத்தை மத்திய அரசு செய்கிறார்கள். ஆக இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது போல் ஒரே கட்சியை கொண்டுவர முயற்சிக்கிறார்கள். வடகொரியாவில் நடப்பது போல் ஒரு ஆட்சியை இங்கு நடத்த வேண்டும் என பாரதிய ஜனதாவினர் கருதுகிறார்கள். நீங்கள் போடுகிற ஓட்டு ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக போடுகிற ஓட்டு. இல்லாவிட்டால் மீண்டும் ஒரு மிசா வரும் என பேசினார்.

சார்ந்த செய்திகள்