Skip to main content

ராணுவ குவிப்பு தமிழகத்தின் மீதான சர்வாதிகார அடக்குமுறை- சீமான்

Published on 01/05/2018 | Edited on 01/05/2018

காவிரிப்படுகை மாவட்டங்களில் திடீரென துணை இராணுவத்தைக் குவித்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கைவிடுத்துள்ளார். அந்த அறிக்கையில் 

 

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப்படுகையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோகார்பன் எடுப்பு , மீத்தேன் எடுப்பு,ஷெல் எரிவாயு எடுப்பு போன்ற பேராபத்துமிக்கத் திட்டங்களைப் புகுத்தித் காவிரிப் படுகை மாவட்டங்களை பாலைவனமாக்க சதித்திட்டம் தீட்டி நடைமுறைப் படுத்தி வரும் மத்தியில் ஆளும் மோடி அரசு, தற்போது காவிரிப்படுகை நிலப்பகுதிகளில் சிஆர்பிஎப் எனப்படும் துணை இராணுவப்படையினரை திடீரென ஆயிரக்கணக்கில் கண்டு வந்து குவித்திருப்பது காலங்காலமாய் அம்மண்ணில் வாழ்ந்து வரும் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

 

seeman1

 

எவ்வித சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல், மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல், தனியார் நிறுவனங்களுக்கு எரிகாற்று எடுக்க அனுமதி அளித்திருக்கும் மத்திய அரசு, துணை ராணுவத்தினரை பயன்படுத்தி.. இயற்கை வளத்தைச் சுரண்டும் அந்த நாசகாரத்திட்டங்களை செயல்படுத்த, அத்திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மக்களை தாக்கி அச்சுறுத்த, அம்மக்களைத் தீவிரவாதிகளாகக் காட்டி ஒடுக்க.. முடிவு செய்து விட்டது.



பயிற்சி எடுப்பதற்காகவே தமிழகத்திற்குத் துணை இராணுவம் வந்திருக்கிறது என பொய்க் காரணம் கூறிக்கொண்டு துணை இராணுவம் வந்திருப்பது நாசகார திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஆயுத பலம் காட்டி அச்சுறுத்தி சிதைக்கவே என்பது அனைவரும் அறிந்த உண்மை. 


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசிற்கு எதிராகத் தமிழகமே போர்க்கோலம் பூண்டிருக்கிற தற்காலச் சூழலில், அதுவும் முற்றும் முழுதாய் பாதிக்கப்பட்டுக் காவிரி உரிமைக்காகவும், மண்ணைப் பிளந்து நீரியல் விரிசல் முறையில் ஹைட்ரோ கார்பன் மற்றும் ஷெல் வாயு எடுக்கிற அபாயகரத்திட்டத்திற்கெதிராகவும் காவிரிப்படுகை முழுக்கப் போராட்டங்கள் வீரியமாகிக் கொண்டிருக்கிற இவ்வேளையில் துணை இராணுவத்தை இறக்கிவிட்டிருப்பது மக்களை அச்சுறுத்தி போராட்டத்தைச் சிதைக்கிற மத்திய பாஜக அரசின் திட்டம் என்று தமிழர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

தமிழகத்தை இன்னொரு காஷ்மீராக, இன்னொரு நாகலாந்தாக, இன்னொரு மணிப்பூராக மாற்றுவதைதான் நோக்கமாகக் கண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதை தான் இது போன்ற நடவடிக்கைகள் அம்பலப்படுத்துகின்றன.
 

seeman1


.

தொடக்கம் முதலே மீத்தேன் எடுப்பு, ஹைட்ரோ கார்பன் எடுப்பு, ஒ.என்.ஜி.சி. எண்ணெய்க்குழாய் பாதிப்பு போன்றவற்றிற்கெதிராக காவிரி படுகை மக்கள் தன்னெழுச்சியாகப் போராடிக்கொண்டிருக்கின்றனர். மக்களின் விருப்பத்திற்கு மாறாக எரிகாற்று எடுக்க மாட்டோம் என்பதை வாய்மொழியாகக் கூறிவிட்டு, பின்புலத்தில் நாசாகாரத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குரிய அத்தனை வேலைகளையும் மத்திய, மாநில அரசுகள் செய்துகொண்டு தான் வருகின்றது. அவற்றின் நீட்சியாகவே தற்போது காவிரிப்படுகையில் துணை இராணுவப்படை குவிக்கப்பட்டு வருகிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

இது சனநாயக மரபுகளுக்கும், மக்களாட்சிக் கோட்பாட்டிற்கும் எதிரான சர்வாதிகார நடவடிக்கைகளாகும்.

மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுறுதி கொண்ட எவராலும் இவ்வடக்குமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, காவிரிப்படுகையில் குவித்து வைக்கப்பட்டிருக்கிற துணை இராணுவப்படையினை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இல்லாவிடில், தமிழகத்திடமிருந்து மிகப்பெரும் போராட்ட எதிர்வினையை மத்திய அரசானது எதிர்கொள்ள நேரிடும் என இதன் மூலம் எச்சரிக்கிறேன் எனக்கூறினார். 

சார்ந்த செய்திகள்