Skip to main content

கரோனாவால் தள்ளிப்போன திருமணம்? தற்கொலை செய்து கொண்ட மாப்பிள்ளை!

Published on 11/05/2020 | Edited on 11/05/2020


 

  veppur - Cuddalore district -



கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ளது ஆவட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவருடைய மகன் சின்னத்தம்பி (28 வயது). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவரது பெற்றோர்கள் சின்னதம்பிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து சின்னத் தம்பிக்கு பிடித்த ஒரு பெண்ணை பார்த்து பேசி முடிவு செய்தனர். இருதரப்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி திருமணம் நடத்துவது என இருவீட்டாரும்  முடிவு செய்தனர்.


இதற்கிடையே கரோனா வைரஸ் காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் மிக சிறப்பாக நடத்த வேண்டிய திருமணத்தை உற்றார் உறவினர்கள் இல்லாமல் எளிமையாக நடத்துவதற்கு விருப்பம் இல்லாததால் இருவீட்டாரும் சேர்ந்து திருமணத்தை இரண்டு மாதங்களுக்குப் பிறகு நடத்துவது என பேசி முடிவு செய்தனர்.

இந்தநிலையில் மணமகன் சின்னத்தம்பி தனக்கு உடனே திருமணம் செய்து வைக்கக்கோரி, தனது பெற்றோர்களிடம் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் ஊரடங்கு அமலில் உள்ளதால் தற்போது திருமணம் செய்து வைக்க முடியாது பொறுமையாக இருக்குமாறு கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த மணமகன் சின்னத்தம்பி அவரது கிராமத்திலுள்ள மூப்பனார் கோவில் பின்புறமுள்ள வேப்பமரத்தில் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

 


இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்கொலை செய்துகொண்ட சின்னத்தம்பியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கரோனாவால் தனக்கு நடக்க வேண்டிய திருமணம் தள்ளி வைக்கப்பட்ட விரக்தியில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவ்வூர் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்