Skip to main content

“மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் ஆறு மாதங்களில் துவங்கும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

"Madurai AIIMS construction work will start in six months" - Minister M. Subramanian

 

“மதுரை எய்ம்ஸ் கட்டட வடிவமைப்பு குறித்த ஒப்பந்தப் பணிகளுக்கான நடைமுறைகள் துவங்கியுள்ள நிலையில், அடுத்த ஆறு மாதங்களில் கட்டுமானப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

 

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் குரங்கம்மை பரிசோதனை ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். அதன்பிறகு மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர், மள்ளப்புரம் பகுதிகளில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலையங்களைத் துவங்கி வைத்தார். பிறகு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்று வரும் கட்டடப் பணிகளைப் பார்வையிட்டார். 

 

பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்னுயிர் காப்போம் திட்டத்தைப் பொறுத்தவரை 96 ஆயிரத்து 807 பேர் விபத்துகளில் சிக்கி சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். இதில் பல ஆயிரக்கணக்கான பேர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். இது போன்று விபத்துகளில் சிக்கியவர்களுக்காக கடந்த 8 மாதங்களில் தமிழக அரசால் செலவழிக்கப்பட்ட தொகை ரூ.87 கோடியே 34 லட்சத்து 44 ஆயிரத்து 609 ஆகும். தமிழகம் முழுவதும் 680க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இந்த சிகிச்சையை வழங்கியுள்ளன. இந்தாண்டு நிதிநிலை அறிக்கையின் மூலம் மதுரை மாவட்டத்திற்கு மட்டும் 23 அறிவிப்புகளின் மூலம் 110 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


கரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள ஒரே தீர்வு தடுப்பூசி மட்டுமே. தமிழக அரசு மேற்கொண்ட கடும் முயற்சியின் காரணமாய் கடந்த நான்கைந்து மாதங்களாக கரோனாவால் ஏற்படுகின்ற உயிரிழப்பு இல்லை என்ற நிலையை எட்ட முடிந்துள்ளது. இதற்கு காரணம் தடுப்பூசி போடுவதில் தமிழகம் நல்ல நிலையை எட்டியிருக்கிறது. முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 95.5 சதவிகிதமாகும். 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 88.52 சதவிகிதமாகும். மாநில அளவில் 95.51 சதவிகிதமாக இருந்தாலும், மதுரையைப் பொறுத்தவரை முறையே 86.20 மற்றும் 75.08 சதவிகிதமாகவே உள்ளது. இதனை அதிகப்படுத்துவதற்கான பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 


குரங்கம்மையைப் பொறுத்தவரை, உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி தற்போது வரை 72 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை டெல்லி, தெலங்கானா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்குள் முதல் குரங்கம்மை பாதிப்பு என்றவுடன் தமிழக முதல்வர் இங்குள்ள பன்னாட்டு விமான நிலைங்களை ஆய்வு செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளார். சென்னை, மதுரை, கோவை, திருச்சி விமான நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு முறைப்படுத்தி வருகிறோம். இதன் காரணமாக தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இல்லை. அமெரிக்காவிலிருந்து வந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிறுவனுக்கும் மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு சிறுவனுக்கும் குரங்கம்மை போன்ற அறிகுறிகள் இருந்தன. ஆனால் சோதனையின் முடிவில் குரங்கம்மை இல்லை என்று வந்துள்ளது. 


தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான மருந்து, மாத்திரைகள் இருப்பில் உள்ளன. ஆகையால் பற்றாக்குறைக்கு வாய்ப்பு இல்லை. இதுகுறித்து ஏதேனும் புகார் இருந்து கவனத்திற்கு கொண்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எய்ம்ஸ் மருத்துவமனைப் பொறுத்தவரை தமிழக அரசு மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக தற்போது ஒரு குழு ஆய்வு மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது முதல் கட்ட மாணவர் சேர்க்கை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றுள்ளது. கட்டட வடிவமைப்புக் குறித்த ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் வடிவமைப்புக்கான பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம். அடுத்த ஏழு மாதங்களில் கட்டுமானப்பணிகள் துவங்கலாம்” என்றார்.

 

இந்த ஆய்வுப் பணிகளின் போது தமிழக அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.

Next Story

எடப்பாடியை கவர்ந்த வேட்பாளர்; நடிகர், டாக்டர், அரசியல்வாதி -  யார் இந்த மதுரை சரவணன்?

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
AIADMK candidate for Madurai Parliament; Actor, doctor, politician - who is this Madurai Saravanan?

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிமுகம், வேட்புமனு தாக்கல் என்று வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளார் பட்டியலை வெளியிட்டர். அதில், மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக கடந்த ஓராண்டுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த மருத்துவர் சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது

மதுரையின் பிரபலமான சரவணா மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் சரவணன், பணபலம் உள்ளவர் என்பதோடு, மதுரை மாவட்ட மக்களிடம் நன்கு அறிந்தவர். பல்வேறு சமூகப் பணிகளையும், ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவமும் முகாம் என மதுரையில் செல்வாக்கு கொண்டவராக இருப்பதால் அதிமுக தலைமை இவருக்கு ‘சீட்’ வழங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. நடிகரும் தயாரிப்பாளருமான மருத்துவர் சரவணன், அரசியலில் இணைவதற்கு முன்பு தன்னை மு.க.அழகிரியின் ஆதரவாளராக காட்டிக் கொண்டார். அகிலன் என்ற திரைப்படத்தை தயாரித்து, அதே படத்தில் இவரும் நடித்தார். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை எனச் சொல்லப்பட்டது. இதையடுத்து அரசியலுக்குள் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து, மதிமுகவில் சேர்ந்து வைகோவுக்கு நெருக்கமானவராகவும், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராகவும் சில ஆண்டுகள் இருந்தார். அங்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், அங்கிருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். அங்கு ஒருவருடம் இருந்த சரவணன் கடந்த 2016 ஆம் ஆண்டு  திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுகவில் மருத்துவர் அணி மாநில துணைச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட சரவணனுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.  

AIADMK candidate for Madurai Parliament; Actor, doctor, politician - who is this Madurai Saravanan?

ஆனால், அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸிடம் தேர்தலில் தோல்வி அடைந்தார். இதையடுத்து, உடல் நலக்குறைவால் போஸ் காலமானதையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. திமுக சார்பில் மீண்டும் போட்டியிட்ட சரவணன் வெற்றி பெற்றார். ஆனால், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட திமுகவில் சீட் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் பாஜகவில் சேர்ந்தார். கையோடு அவருக்கு பாஜக மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட சரவணன் தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து பாஜகவில் மாநகர மாவட்டத் தலைவராக சரவணன் செல்வாக்குடன் இருந்து வந்தார். மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் கட்சித் தலைவருக்கும், சரவணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. 

இந்த சூழலில் மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவத்தையடுத்து, அதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று சரவணன் தெரிவித்தார். மேலும், பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதாகவும் சொல்லப்பட்டது. அதன் பிறகு பாஜகவில் இருந்து விலகிய சரவணனன் மீண்டும் திமுகவில் இணைவார் என சொல்லப்பட்டது. ஆனால், அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மூலம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த சரவணன், திடீரென அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மதுரையில் விருப்பமனு பெறப்பட்டது. ஆனால், போட்டியிட மதுரை மாவட்டத்தில் அதிமுக சீனியர் நிர்வாகிகள் பெரிதாக யாரும் முன்வரவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது சீட் கேட்டு போட்டி போட்டவர்கள், இந்தமுறை கட்சி அலுவலகம் கூட வரவில்லை என கூறப்படுகிறது. இப்படியிருக்கையில், விருப்பமனு கொடுத்த சில நிர்வாகிகள், தங்களுக்கு சீட் கேட்காமல் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனு கொடுத்து எஸ்கேப் ஆகி வந்தனர். 

AIADMK candidate for Madurai Parliament; Actor, doctor, politician - who is this Madurai Saravanan?

இதில், தனக்கு சீட் வேண்டும் என்று விருப்ப மனு கொடுத்த ஒரே நபர் டாக்டர் சரவணன் மட்டும்தான். முக்கிய நிர்வாகிகள் பலரை அதிமுக தலைமை போட்டியிட வற்புறுத்தியும் யாரும் 'ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் கட்சியில் சேர்ந்த ஓராண்டிலேயே மதுரை தொகுதி வேட்பாளராக சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் ஸ்டார் வேட்பாளரான சு.வெங்கடேசன் மதுரை தொகுதியில் களம் காணும் நிலையில், அவருக்கு எதிராக அதிமுக கூட்டணி  சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, கடந்த மார்ச் 25 ஆம் தேதி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன், பிரமாண்ட முறையில் வேட்புமனு தாக்கல் செய்த சரவணன் தொடர்ந்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். மதிமுக, பாஜக, திமுக போன்ற கட்சிகளுக்குச் சென்றுவந்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு அதிமுகவில் சேர்ந்த மருத்துவர் சரவணன், மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுவது மதுரை அரசியல் வட்டாரத்தில் அனலை கிளப்பியுள்ளது.