அழகர் பெருமான் நமக்கெல்லாம் அருள் புரிந்து நம்மை காப்பாற்றுவார் என தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேட்டி அளித்தார்.
மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் பழமுதிர்சோலை முருகன் சபை சார்பில் கரோனா பாதிப்படைந்தவர்களுக்கு வழங்க உள்ள உணவுகள் தயார் செய்யும் பணியினை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி .உதயக்குமார்,
உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா மதுரையில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்விக்கு, ’’இப்போது நடப்பது மனித உயிர் குறித்த சவால். உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் எந்த மத விழாக்களும் நடைபெறாது.
அழகர் பெருமான் நமக்கெல்லாம் அருள் புரிந்து நம்மை காப்பாற்றுவார். ஊரடங்கு அமலில் இருக்கும்வரை மக்கள் கூடும் அனைத்து மத விழாக்களுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ள இந்நிலையில் எந்த விழாவாக இருந்தாலும் நடைபெறாது.
ஊரடங்கு திரும்ப பெற்ற பின்னர் நடைபெறும் விழாக்களை நடத்துவது குறித்து ஆலோசனைக்கு பிறகு முடிவுகள் தெரிவிக்கப்படும். ஊரடங்கின்போது, மக்கள் கூடும் எந்த நிகழ்வும் தடை செய்யப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவு’’என்று தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் அறிக்கை குறித்த கேள்விக்கு, ‘’ திமுகவின் தீர்மானங்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு வெளியிடப்படுகிறதா? அல்லது கேளிக்கைக்காக வெளியிடப்படுகிறதா? என்பது குறித்து மக்களே வியப்படைகிறார்கள். திமுக தங்களின் அடையாளங்களை இழந்து விடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற அறிக்கையை வெளியிடுகிறார்கள்’’ என கூறினார்.