
நாமக்கல் மாவட்டம், டி.ஜி.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். 60 வயதான இவர் ஜவுளித் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் சுந்தரம். 80 வயதான இவர் திருச்சி தென்னூரைச் சேர்ந்தவர். சுந்தரம் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.
இருவரும் நண்பர்கள் என்ற நிலையில், ரவிச்சந்திரன் கடந்த 2016ம் ஆண்டு சுந்தரத்தை அழைத்து வந்து ஈரோட்டில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் தங்க வைத்து ஜோதிட தொழில் செய்ய உதவி செய்திருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சுந்தரத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலையில் ரவிச்சந்திரன் சுந்தரத்தை பார்ப்பதற்காக அவர் தங்கி இருந்த லாட்ஜுக்கு வந்துள்ளார்.
கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுந்தரம் எவ்வித அசைவுமின்றி இறந்த நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.