Skip to main content

நிலத்தகராறில் தந்தையை வெட்டிக்கொன்ற மகன்; நண்பருடன் கைது

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

 

land father and son incident police namakkal district

 

கொல்லிமலை அருகே, நிலத்தகராறில் பெற்ற தந்தை என்றும் பாராமல் கொடுவாளால் மகனே 
வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   

 

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வளப்பூர் நாடு கீழ் செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு ராஜ்குமார் (வயது 27) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.  

 

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு லதா இறந்து விட்டார். அதையடுத்து, உள்ளூரைச் சேர்ந்த பேபி என்பவரை செல்வராஜ், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். செல்வராஜூக்கு சொந்தமாக 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.  

 

இந்த நிலத்தை பாகம் பிரிப்பது தொடர்பாக தந்தைக்கும், மகனுக்கும் மோதல் இருந்து வந்தது.  உறவுக்காரர்கள் பஞ்சாயத்து பேசிப்பார்த்தும், அவர்களுக்குள் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.

 

இது ஒருபுறம் இருக்க, சேந்தமங்கலம் காவல்நிலையத்தில் ராஜ்குமார், தனக்குச் சேர வேண்டிய  சொத்தை பாகம் பிரித்துக் கொடுக்காமல் தந்தை ஏமாற்றி வருவதாக ராஜ்குமார் ஒரு புகார் 
அளித்திருந்தார்.  

 

இந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக ராஜ்குமாரையும், அவருடைய தந்தையையும் காவல்துறையினர் சேந்தமங்கலம் காவல்நிலையத்திற்கு அழைத்து இருந்தனர். அதன்பேரில், ஆக. 23- ஆம் தேதி தந்தை, மகன் இருவரும் விசாரணைக்குச் சென்றனர். பிறகு, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரிப்பதாகச் சொல்லி அனுப்பி விட்டனர்.

 

இதையடுத்து தந்தையும், மகனும் தனித்தனியாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். கொல்லிமலை இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே செல்வராஜ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ராஜ்குமார், அவருடைய நண்பர் தினேஷ்குமார் ஆகியோர் வழிமறித்தனர்.

 

பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கொடுவாளால் செல்வராஜை சரமாரியாக வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.  

 

இதுகுறித்து தகவல் அறிந்த வாழவந்தி நாடு காவல்நிலைய காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடற்கூராய்வுக்காக சடலத்தை, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

நிலத்தகராறு தொடர்பாக செல்வராஜை அவருடைய மகன் ராஜ்குமார் மற்றும் அவருடைய நண்பர் தினேஷ்குமாரும் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது.  

 

இருவரும் உள்ளூரில் ஒருவர் வீட்டில் பதுங்கி இருந்ததை அறிந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.  

 

சார்ந்த செய்திகள்