தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று மார்த்தாண்டத்தில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் என்பவரின் இல்ல திருமண விழாவிற்கு சென்றிருந்தார். மேலும் குமரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அழகிரி இன்று மாலை மார்த்தாண்டம் சந்திப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸார் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டார்.

இதில் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி, அகில இந்திய பொதுச் செயலாளர்கள் சஞ்சய் தத், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை உருவானது. இதை தொடர்ந்து போலீசார் மறியலை கைவிடக்கோரி போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அது தோல்வியடைந்த நிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அங்கு ஒரு பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.