
போச்சம்பள்ளி பாரூர் பெரிய ஏரியில் இருந்து ஜூலை 2- ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதானக் கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு, வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதானக் கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்கு பாரூர் பெரிய ஏரியிலிருந்து 02/07/2020 முதல் 13/11/2020 வரை மொத்தம் 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்திலுள்ள 2,397 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.