Skip to main content

கொடநாடு வழக்கு: அரசு வழக்கறிஞரின் கோரிக்கை ஏற்று விசாரணை ஒத்திவைப்பு! 

Published on 30/10/2021 | Edited on 30/10/2021

 

Kodanad case Postponement of hearing at the request of the public prosecutor!

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுவரை 45க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, தற்போது வாளையாறு மனோஜ் தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் உள்ளனர். வாளையாறு மனோஜுக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளைச் சிறையில் உள்ளார்.

 

இந்நிலையில், இந்த வழக்கின் திருப்புமுனையாக காவல்துறையினர் சயான் மற்றும் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறுவிசாரணை மேற்கொண்டனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, சதீசன், பிஜின் குட்டி ஆகியோரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது.

 

கடந்த 25ஆம் தேதி கனகராஜின் சகோதரர்களான தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நேற்று (29.10.2021) தனபாலை 5 நாட்கள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்டம், உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயான், வாளையாறு மனோஜ் மற்றும் உதயகுமார் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

 

அரசு தரப்பில் சிறப்பு வழக்கிறஞர் ஷாஜகான், அரசு வழக்கறிஞர் ஆனந்த் ஆஜராகினர். விசாரணை தொடங்கியதும் அரசு வழக்கறிஞர்கள், மேல் விசாரணைக்கு நீண்ட நாட்கள் தேவை என வலியுறுத்தினர். அதனை ஏற்ற நீதிபதி சஞ்சய் பாபா, வழக்கு விசாணையை நவம்பர் மாதம் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும், தனபால் மற்றும் ரமேஷின் ஜாமீன் வழக்கை நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

Kodanad case Postponement of hearing at the request of the public prosecutor!

 

வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான், “கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுவரை 45க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு விசாரணையில் தேவைப்பட்டால் கைது நடவடிக்கை இருக்கும். விசாரணைக்கு கால அவகாசம் தேவை என கோரப்பட்டது. இதனால், விசாரணை நவம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ரமேஷை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதனால், 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார். தனபால் மற்றும் ரமேஷின் ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 2ஆம் தேதி நடக்கும். வழக்கில், மின்னணு தடயங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. செல்ஃபோன் ஆப்ரேட்டர்களிடம் விசாரணை நடத்த அவகாசம் தேவை” என்று அவர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொடநாடு பங்களாவில் சி.பி.சி.ஐ.டி. ஆய்வு!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
C.b.C.I.D search in KodaNadu Bungalow

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேர்  ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஒரு ஆண்டாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி. முருகவேல் நியமிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் என்பவர், கொடநாடு பங்களாவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தடயங்களை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதால் நீதிமன்றத்தின் சார்பில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்குமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், தடயவியல் துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் கொடநாடு பங்களாவிற்கு ஆய்வு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கொடநாடு பங்களாவை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. மாதவன் தலைமையில் விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. முருகவேல், புலனாய்வு அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மின் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் என 20 பேர் கொண்ட குழுவினர் இன்று (07.03.2024) நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின் போது கொடநாடு பங்களாவில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவா என சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உதகை அமர்வு நீதிமன்றத்தில் நாளை (08.03.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'சர்ச் வாரண்ட் ரெடி'- தீர்வைத் தேடும் 'கொடநாடு'

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
'Search Warrant Ready'- Kodanadu looking for a solution

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 23/02/2024  அன்று நடந்த வழக்கு விசாரணையில் கொடநாடு பங்களாவில் ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அன்றைய தினம்  உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசாரும், அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாளையார் மனோஜ், சயான் ஆகிய இருவர் மட்டுமே ஆஜராகினர்.

கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற கொடநாடு பங்களாவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாலும், அதை நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் என்பவர் கடந்த வழக்கு விசாரணையில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி தரப்பில் ஏற்கெனவே கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு அமைத்திருப்பதாகவும், அந்தக் குழு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சம்பந்தப்பட்ட பங்களாவில் ஆய்வு செய்ய அனுமதிப்பதாகவும், ஆய்வின் போது ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்வதை முழுமையாக வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு இருக்கக்கூடிய தடயங்களை அழிக்கவோ அல்லது மாற்றவோ கூடாது என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் எட்டாம் தேதிக்கு  ஒத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில், வரும் வாரத்தில் சிபிசிஐடி கொடநாடு பங்களாவில் ஆய்வு நடத்த தற்போது நீதிமன்றம் தேடுதல் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறை மற்றும் மின்சாரம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழு வரும் வாரத்தில் கொடநாடு பங்களாவில்  ஆய்வு செய்வதற்கான தேடுதல் உத்தரவு (SEARCH WARRANT) கொடுக்கப்பட்டுள்ளது.