
சென்னையில் மளிகைக் கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த சதீஷ், காயத்திரி தம்பதியினரின் இளையமகள் தாரணி (13). இவர் நேற்று மாலை வீட்டின் அருகிலுள்ள மளிகைக் கடையில் குளிர்பானம் மற்றும் ரஸ்னா வாங்கி குடித்துள்ளார். குளிர்பானத்தை சிறுமி குடித்த சிறிது நேரத்தில் வாந்தி ஏற்பட்டதோடு மூக்கில் சிவப்பு நிற சளி வந்ததைக் கண்டு சிறுமியின் சகோதரி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். தாரணியின் தாய் வந்து பார்ப்பதற்குள் மயங்கி விழுந்த சிறுமியின் உடல் நீல நிறத்தில் மாறியிருக்கிறது. உடனே, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுமி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அதேபோல் அந்த சிறுமி குடித்த குளிர்பானத்தின் மாதிரியையும் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அந்த மளிகைக் கடையில் தரமற்ற பொருட்கள் விற்கப்படுவதாக அந்தப்பகுதி மக்கள் குற்றம்சாட்டிய நிலையில், இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.