Skip to main content

கந்துவட்டிக்கொடுமையால் தீக்குளிப்பு: பழனிச்சாமியின் பொறுப்பின்மையே காரணம்! ஆதித்தமிழர் பேரவை கண்டனம்

Published on 24/10/2017 | Edited on 24/10/2017
கந்துவட்டிக்கொடுமையால் தீக்குளிப்பு: பழனிச்சாமியின் பொறுப்பின்மையே காரணம்! ஆதித்தமிழர் பேரவை கண்டனம்

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலத்தில் கந்துவட்டிக் கொடுமையால் தீக்குளித்து மரணமடைந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு அரசின் நிர்வாக பொறுப்பின்மையே காரணம் என்று ஆதித்தமிழர் பேரவையின் அதியமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

திருநெல்வேலி மாவட்டம். கடையநல்லூருக்கு அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த ஏழை கூலித் தொழிலாளி இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலெட்சுமி ஆகியோர், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு முன்பு, தங்கள் உடலில் மண் எண்ணெயை ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டதுடன், தங்களுடைய குழந்தைகள் அய்ந்து வயது மதி சரண்யா, ஒன்றரை வயது அட்சய பரணியா ஆகியோர் மீதும் மண் எண்ணெய் ஊற்றித் தீ வைத்து எரித்துக் கொண்டு, 80 விழுக்காடுக்கு மேலாக உடல் கருகிய நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர், தாங்க முடியாத இந்த துயர சம்பத்திற்கு ஆதித்தமிழர் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

நெஞ்சத்தை பதற வைக்கும் இந்த கோரக் கொலை சம்பவத்திற்கு காரணமான கந்துவட்டிக் குண்டர்களை ஆட்சியர் உத்தரவின் பேரில் கைது செய்திருப்பதாக தகல்கள் வருகின்றது, இது வெறும் கண் துடைப்பு நடவடிக்கையாவே தெரியவருகிறது, காரணம், வாங்கிய கடனுக்கு மேலாக வட்டி வசூலிக்கப் படுவதாகவும், இதிலிருந்து காப்பாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பலமுறை தொடர்புடைய அசன்புதூர் காவல் நிலையத்திற்கும், ஆட்சித் தலைவருக்கும் மனுவளித்தும் எவ்வித பலனும் கிடைக்க வில்லை என்றே இந்த ஏழைக் குடும்பம் இப்படி ஒரு முடிவை தேடியுள்ளது.

கந்துவட்டி தடைச் சட்டம் 16.11.2003 ல் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது, சட்டம் வந்து சில மாதங்கள் கந்து வட்டிக்காரர்களின் கொடுமைகளை அடங்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு பின்னர், இந்தச் சட்டத்தைக் காவல்துறை கிடப்பில் போட்டு விட்டது. இதனால் பல தற்கொலை மரணங்கள் தமிழகத்தில் நடந்தேரியுள்ளது, அப்போதே இந்த சட்டத்தை முறையாக நடைமுறைப் படுத்த அரசு முன் வந்து இருந்தால் இப்படி ஒரு துயர சம்பவம் நடக்காமல் தடுக்கப்பட்டிருக்கும்.

காவல்துறையின் கட்டுப்பாட்டை தன்வசம் வைத்துள்ள பழனிச்சாமி அரசு, தன் அரசை காப்பாற்றிக் கொள்வதற்கும், தங்கள் ஆட்சிக்கு எதிராக கருத்துச் சொல்பர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைப்பதற்குமான அரசின் அடியாட் கும்பலாகவே காவல்துறையை பயன்படுவதுதால் இதைப் போன்ற உயிரிழப்புகள் இவர்களுக்கு கிள்ளுக் கீரையாகவே தெரிகிறது. இது அரசின் நிர்வாகப் பொறுப்பின்மையையே காட்டுகிறது.

மக்களுக்காவே அம்மாவின் ஆட்சி நடத்துவதாக கூறிக் கொள்ளும் பழனிச்சாமி அரசு இந்தக் கொடுமையைத் தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்தக் கொடுமைக்குக் காரணமானவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து தக்க நடவடிக்கை எடுப்பதோடு, தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் அனைவரின் மீதும் கிரிமினல் வழக்கு தொடுத்து, பதவி நீக்கம் செய்து சிறையில் அடைக்க வேண்டும். கந்து வட்டி தடைச்சட்டம் மட்டும் அல்லாது அனைத்து சட்டங்களையும் உரிய முறையில் இயக்க வேண்டும். பாதிக்கபட்ட குடும்பத்தாருக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்