Skip to main content

லஞ்ச வழக்கில் இரண்டு அரசு ஊழியர் மீது வழக்கு!

Published on 07/01/2021 | Edited on 08/01/2021

 

kallakurichi incident

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவிடுதி மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் 65 சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த 28-ம் தேதி நேர்காணல் நடத்தப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் மாவட்ட பழங்குடியினர் நலத்திட்ட அலுவலர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிக் கொண்டு பணி நியமனம் செய்து வருவதாகப் புகார் எழுந்தது.

 

இதனையடுத்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 4-ஆம் தேதி கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பழங்குடியினர் நல அலுவலகத்தில் அதிரடியாகப் புகுந்து சோதனை செய்தனர். மேலும் அலுவலகத்தில் இருந்த அனைவரையும் அழைத்து விசாரணை செய்தனர். அப்போது அலுவலக உதவியாளர் செல்வராஜ் மற்றும் இளநிலை பொறியாளர் எழில்மாறன் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சமையலர் பணியிடங்களுக்கு பலரிடம் அவர்கள் லஞ்சமாகப் பணம் வாங்கியது தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் சோதனை செய்ததில் 31,500 ரூபாய் பணம் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அலுவலர் செல்வராஜ் வீட்டிற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கட்டுக்கட்டாக ஆறு லட்ச ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக அலுவலக உதவியாளர் செல்வராஜ், அவருக்கு உதவியாக இருந்த இளநிலை பொறியாளர் எழில்மாறன் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

அரசுப் பணிக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்யப்படுவது பகிரங்கமாக வெளிவந்துள்ளது. இதனால் நேர்முகத்தேர்வுக்குச் சென்ற தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி, இதற்கு உடந்தையாக இருந்த உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்