Skip to main content

கும்பி எரிகிறது கோலாகல கிரிக்கெட் ஒரு கேடா? கி.வீரமணி

Published on 06/04/2018 | Edited on 06/04/2018


 

K. Veeramani

கும்பி எரிகிறது கோலாகல கிரிக்கெட் ஒரு கேடா என்று கண்டனம் தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியை உடனே தள்ளிப்போடுங்கள் என்று கூறியுள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதி பாலைவனமா கிடும் அவலம், கருநாடகாவின் முரண்டு, பிடிவாதத்தாலும், மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருவதாலும் தமிழ்நாடே போராட்ட களமாக மாறி விட்டது.
 

இங்குள்ள ஒரு மாநில அரசு ஏனோ தானோ, ஒப்புக்கு அழுதவன் கதையாக, கபட நாடகம் ஆடுகிறது!
 

மத்திய அரசுக்கு போதிய அரசியல் அழுத்தம் கொடுத்து, தமிழ்நாட்டு மாநில உரிமைகளை - அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அளித்துள்ள உரிமைகளைப் பாதுகாக்கவும் தவறி விட்ட நிலையில், மக்கள் ஆங்காங்கே, தாங்களே குமுறி கொந்தளித்து எழுந்து போராட்டக் களத்தில் குதித்திடும் இவ்வேளையில், கிரிக்கெட் அய்.பி.எல். என்று கேளிக்கை - சூதாட்டம் பந்தயத்திற்கு வாய்ப்பு அளிக்கும் போக்கில்  நடத்திட முன்வருவது பட்டினியால் வாடும் விவசாயிகளையும் பாதிக்கப்பட்ட மக்களையும் பற்றிக் கவலைப்படாத ஒரு போக்கு. இதனைத் தடுத்து நிறுத்தி, இப்பிரச்சினை முடிவுக்கு வரும் வரை, இந்த கிரிக்கெட் என்ற தறிகெட்ட  பந்தய ஆட்டங்கள் நிறுத்தி வைக்க வேண்டும். கும்பி எரியும்போது கோலாகல கிரிக்கெட் ஒரு கேடா?
 

வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  உடனே தள்ளிப் போடுங்கள்.
 

இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்