Skip to main content

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! -தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினர் போராட்டம்!

Published on 15/09/2020 | Edited on 15/09/2020

 

Jobs in Tamil Nadu are for Tamilians! - Tamil thesiyea perayakkam


தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே எனும் முழக்கத்துடன் திருச்சி பொன்மலையில் அமைந்துள்ள மத்திய தொழிற்சாலை முன்பு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினர் தொடர்ந்து மூன்று நாட்களாக போராடிவருகின்றனர்.

 

இதன் தொடர்ச்சியாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே!” என்ற முழக்கத்தோடு, திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை முன்பு தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கும் ஒருவாரம் தொடர் மறியல் போராட்டத்தின், நான்காம் நாள் போராட்டம் இன்று (15.09.2020 - செவ்வாய்) காலை நடைபெற்றது.
 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள இந்திய அரசு அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் தொடர்ந்து வடமாநிலத்தவர் உள்ளிட்ட வெளி மாநிலத்தவரை இந்திய அரசு பணியமர்த்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, கரோனா முழுமுடக்கக் காலத்திலும் தமிழ்நாட்டு இரயில்வேயில் 3,218 பேரை வேலையில் சேர்த்துள்ளது. இவர்களில் 90 விழுக்காட்டினருக்கு மேல் இந்திக்காரர்களும், பிற அயல் மாநிலத்தவர்களும் ஆவர். திருச்சி பொன்மலை தொடர்வண்டித் தொழிற்சாலையில் அண்மையில் பணியில் சேர்க்கப்பட்ட 541 பேரில், 400 பேர்க்கும் மேல் இந்திக்காரர்கள்! இதே இரயில்வேத் துறையில் இரண்டாண்டு பழகுநர் (Act Apprentice) பயிற்சி முடித்த பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலையின்றி வறுமையில் வாடுகின்றனர். அவர்களைப் புறக்கணிக்கிறது இரயில்வே!

 

அ.இ.அ.தி.மு.க. ஆட்சி 2016 -இல் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத பிற மாநிலத்தவரும் சேரலாம்; வேலையில் சேர்ந்த பின் இரண்டாண்டுகளில் தமிழ் கற்றுக்கொண்டால் போதும் என்று அத்திருத்தம் கூறுகிறது.

 
ஆனால், கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், ஆந்திரம், மத்தியப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் மாநில அரசு, தனியார் துறை, இந்திய அரசு நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கு 100 விழுக்காடு, 90 விழுக்காடு, 80 விழுக்காடு - வேலை வழங்க வேண்டும் என்று சட்டங்கள் போடப்பட்டு செயல்படுகின்றன.

 

இந்நிலையில், தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டும், 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும். கரோனா காலத்தில் தென்னகத் தொடர்வண்டித்துறையில் பணி நியமனம் செய்த 3,218 பேரில் வெளி மாநிலத்தவர்களில் 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள அனைவரின் தேர்வையும் இரத்துச் செய்ய வேண்டும், அப்பணி இடங்களைத் தேர்வெழுதிய தமிழர்களுக்கு வழங்க வேண்டும், மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் மண்ணின் மக்களுக்கான வேலைச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.

 

அமைப்பு சாரா தொழிலாளர் வேலை வழங்கு வாரியம் அமைத்து உடலுழைப்புப் பணிகள் உட்பட அனைத்துப் பணிகளிலும் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை முன்பு கடந்த 11.09.2020 அன்று தொடங்கி 18.09.2020 வரை ஒரு வாரம் தொடர் மறியல் நடத்தப்படுகின்றது.

 

Ad

 

அதன்படி, இன்று (15.09.2020) செவ்வாய்க்கிழமை காலை, திருச்சி பொன்மலை தொடர்வண்டித் துறைத் தொழிற்சாலை முன்பு – மூன்றாம் நாள் மறியல் போராட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், தஞ்சை மாவட்டச் செயலாளருமான தோழர் நா. வைகறை தலைமையில் நடைபெற்றது. த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. விடுதலைச்சுடர் முன்னிலை வகித்தார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு பழ. இராசேந்திரன் போராட்டப் பேரணியைத் தொடங்கி வைத்துப் பேசினார்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.