கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது வண்ணாரப்பேட்டை 49ஆவது வார்டில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்தது, தொழிற்சாலை அபகரிப்பு செய்தது என அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
தேர்தல் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், முதலாவதாக கைது செய்யப்பட்ட வழக்கிலும் ஜாமீன் பெறுவதற்கான முயற்சியில் ஜெயக்குமார் தரப்பு உள்ளது. இந்த நிலையில், மூன்றாவதாக கைதுசெய்யப்பட்ட வழக்கில் ஜெயக்குமாரை மார்ச் 11வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் முதலாவதாக கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், தொழிற்சாலை அபகரிப்பு செய்ததாக பதியப்பட்ட வழக்கில் ஜாமீன் கிடைக்கும்வரை அவரால் சிறையில் இருந்து வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.