Skip to main content

“டாஸ்மாக்” கடையில் மோதல், கைகலப்பு; கோமா நிலைக்கு போன சிறைக்காவலர்

Published on 06/08/2017 | Edited on 06/08/2017

“டாஸ்மாக்” கடையில் மோதல், கைகலப்பு; கோமா நிலைக்கு போன சிறைக்காவலர்

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள வெள்ளார் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளப்பம்பட்டியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது-42). இவர் சேலம் மத்திய சிறையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தவர். தற்சமயம் புகாரின் பேரில் அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேச்சேரி அருகே தர்மபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் கேண்டீன் என்ற இடத்தில், செயல்பட்டுவரும் அரசு மதுபானக்கடைக்கு கடந்த 27-ந் தேதியன்று வைத்தியநாதன் சரக்கு அடிக்க வந்துள்ளார். அவர் ரூ.80 கொடுத்து விட்டு ரூ.100- மதிப்புடைய மதுபாட்டில் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகவும், அங்கே பணியில் இருந்த கடை மேற்பார்வையாளர் மோகன்குமார், விற்பனையாளர் முருகன் ஆகியோர் அவரை தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வைத்தியநாதன் என்பது ரூபாய் மதிப்புடைய சரக்க பாட்டிலை கேட்டபோது, விற்பனையாளர்கள் பத்து ரூபாய் கூடுதலாக கேட்டதாகவும் இரு தரப்பிலும் கூறப்படுகிறது.  இதில் மயங்கி விழுந்த வைத்தியநாதன்  மறுநாள் காலை வரை அங்கேயே கிடந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த அவருடைய உறவினர்கள் வைத்தியநாதனை மீட்டு தர்மபுரி தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் கோமா நிலையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக அவருடைய மனைவி லதா(வயது-37) என்பவர் மேச்சேரி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், வைத்தியநாதனை தாக்கியதாக கடை மேற்பார்வையாளர் மோகன்குமார், விற்பனையாளர் முருகன் ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இதனிடையே நேற்று முன்தினம் வைத்தியநாதனின் தந்தை செங்கோடன், தாயார் வசந்தா, மனைவி லதா மற்றும் பெண்கள் என 12-பேர் சேர்ந்து வைத்தியநாதனை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படும் மதுக்கடைக்கு வந்தனர்.

அங்கு வந்த அவர்கள் “டாஸ்மாக்” கடையின் முன்பாக உட்கார்ந்து கொண்டு  மேற்பார்வையாளர், விற்பனையாளரை கைது செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அப்போது கடையில் இருந்த விற்பனையாளர்கள் செந்தில்குமார், முருகன் ஆகியோருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் வாய் தகராறு முற்றவே, அவர்கள் கடைக்குள் புகுந்து ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை தூக்கிக்கொண்டுவந்து சாலையில் போட்டு உடைத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் தாக்கியதில் விற்பனையாளர் முருகன் தலையில் காயமடைந்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக கடை விற்பனையாளர் செந்தில்குமார் மேச்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் செங்கோடன் உள்பட 12-பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒன்பது பெண்கள் உள்பட 10 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில், வைத்தியநாதன் தாக்கப்பட்ட வழக்கில், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மோகன்குமாரை மேச்சேரி போலீசார் நேற்று மாலை திடீரென கைது செய்தனர்.

மோகன்குமார் கைதை கண்டித்து மேட்டூர், ஓமலூர் தாலுகாக்களில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட “டாஸ்மாக்” கடைகளை சேர்ந்த விற்பனையாளர்கள் இரவு 7.30 மணியளவில் அடைத்து விட்டு,  மேச்சேரி காவல் நிலையத்தின் முன் திரண்டு வந்தனர்.

அங்கு அவர்கள் கைது செய்யப்பட்ட மோகன்குமாரை விடுவிக்க கோரி போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த கலால் துறை தனி தாசில்தார் உண்ணாமலை, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், விவேகானந்தன் ஆகியோர் டாஸ்மாக் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது தொடர்பாக மேட்டூர் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் டாஸ்மாக் ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்