Skip to main content

53 நாட்கள் ஆகிறது; ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை - சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

Published on 03/09/2022 | Edited on 03/09/2022

 

It has been 53 days; Action not taken against OPS - CV Shanmugam allegation

 

கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்குப் பின் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சீலை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வழக்கு தொடர்ந்திருந்தனர்.

 

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 21ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுகவினர் அலுவலகத்தை திறந்து உள்ளே சென்றனர். அப்போது, அலுவலகத்தினுள் ஆவணங்களும், பொருட்களும் கீழே சிதறியிருந்தது. 

 

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவிற்கு வந்த பரிசுப் பொருட்களும், சில விலை உயர்ந்த பொருட்களும் காணமல் போயுள்ளது என்று இ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் பின் சி.வி.சண்முகம் சென்னை இராயப்பேட்டை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்திருந்தார்.

 

இந்நிலையில் சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தலைமை கழகத்தை சேதப்படுத்திய காட்சியை தமிழகமே பார்த்தது. அந்த நிகழ்வு  தொடர்பான புகாரை அளித்தோம். ஆனால் சென்னை காவல்துறை நாங்கள் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுத்தவர்களையே கைது செய்தது. .

 

இதன் பொருட்டு எடப்பாடி பழனிசாமி தொடங்கிய வழக்கில் நீதிமன்றம் தலைமை கழகத்தின் சாவியை பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியிருந்தது. 21/7/22 அன்று சாவி ஒப்படைக்கப்பட்டது. அலுவலகத்தை திறந்து பார்த்த பொழுது தலைமை கழக அனைத்து அறைகளும் நொறுக்கப்பட்டு இருந்தது. ஆவணங்கள், பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதற்கு 23/07/22 அன்று நான் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அது பதிவு செய்யப்படவில்லை.

 

உயர்நீதிமன்றத்தில் காவல்நிலையத்தில் நான் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவேண்டும் எனவும் வழக்கு தாக்கல் செய்தேன். தமிழக அரசின் வழக்கறிஞர் இந்த வழக்கிலே 13/08 அன்றே பதிவு செய்யப்பட்டதும் அவை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது என்றும் சொல்லப்பட்டது.

 

ஆனால் இன்று வரை  தலைமை கழகத்தை உடைத்து ஆவணங்களை கொள்ளை அடித்த ஓபிஎஸ் மீதும் அவரது ஆட்கள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பவம் நடந்து இன்றுடன் 53 நாட்கள் ஆகிறது. நான் புகார் கொடுத்து 41 நாள் ஆகின்றது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்