இந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று பிரதமர் மோடி 20 லட்சம் கோடி ரூபாயில் தொலைநோக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். இது தொடர்பான அம்சங்களை விளக்கும் வகையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து கூறுகையில்,
நிதியமைச்சர் அறிவிப்பு ஏழை, எளிய மக்கள் கைவிடப்பட்டு விட்டார்களோ என்ற ஏமாற்றத்தையே தருகிறது. பெரிய மீட்புத் திட்டம் என பிரதமர் முழங்கியதற்கும், நிதியமைச்சர் அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாநிலங்களின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்த நிதி ஒதுக்கீடு எதுவும் அறிவிக்கப்படவில்லை. கூட்டாட்சித் தத்துவத்தின் கடமை பொறுப்பை நிறைவேற்ற மத்திய அரசு எண்ணவில்லை என்பதை இது காட்டுகிறது.
விவசாயிகளும், தொழிலாளர்களும் நாட்டின் முதுகெலும்பு என்பதை மறந்துவிட்டு மத்திய அரசு செயல்படுகிறது. கரோனா பாதிப்பிலிருந்து இந்திய பொருளாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்ய ஆக்கப்பூர்வமான செயல்திட்டம் எங்கே? ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000 ரூபாய் நேரடியாக வழங்கும் திட்டத்தை முதலில் அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.