Skip to main content

காவிரி உரிமை போராட்டத்தை ஐ.பி.எல். போட்டி திசைதிருப்பி விடக்கூடாது: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

Published on 04/04/2018 | Edited on 04/04/2018
ipl



உடனடியாக IPL போட்டிகளை இப்போது நடத்த முடியாது என்று தமிழக அரசு அனுமதி மறுத்து உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுவதும் நடக்கின்ற காவிரி உரிமை போராட்டத்தை IPL போட்டி திசைதிருப்பி விடக்கூடாது என்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கூறியுள்ளது. 
 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று ஆளுங்கட்சி உட்பட அனைத்துக்கட்சிகளுமே தமிழகத்தில் தெருவில் இறங்கி போராடி வருகிறோம். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல், இரயில் மறியல், விமானநிலைய முற்றுகை, கடையடைப்பு போன்ற பல வகையான போராட்டங்களை தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை இந்த தொடர் போராட்டங்கள் நிற்காது என்பது கடந்த ஒரு வாரகாலமாக தமிழகத்தில் நிலவுகின்ற சூழ்நிலை. தமிழக இளைஞர்களை பொறுத்தவரை எப்படி தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவது என்று குமுறிக் கொண்டு இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல மெரினாவில் போராட்டத்தை தொடங்கி தமிழகம் பூராவும் நடத்தலாம் என்றால் தமிழக காவல்துறை தடுத்து நிறுத்துகிறது. ஆனால் இளைஞர்களும், மாணவர்களும் களமிறங்கினால் தான் மத்திய அரசு பயப்படும் என்ற சூழ்நிலை நிலவுகிறது. மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் நடக்கப்போகின்ற IPL போட்டி கிரிக்கெட் மைதானத்தை பயன்படுத்தி கொண்டால் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விளையாட்டு மைதானத்திற்கு உள்ளே சென்றுவிட்டு விளையாட்டு போட்டியும் நடக்கவிடாமல் இரவுப்பகலாக உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினால் உலகம் முழுவதும் இந்த செய்தி போய்சேரும் என்கின்ற திட்டம் பரிசீலிக்கப்படுகிறது. அப்படி உள்ளிருப்பு போராட்டத்தை உள்ளே செல்பவர்கள் ஆரம்பித்துவிட்டால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல தமிழகம் பூராவும் அது பற்றிக்கொள்ளும்.  மாநில அரசு காவல்துறையை கொண்டு கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. காவல்துறையில் இருப்பவர்களும் தமிழர்கள் தானே. அவர்களுக்கும் காவிரி தண்ணீர் வேண்டும் தானே.

தமிழக அரசே உண்ணாவிரதம் போன்ற அறவழிப் போராட்டங்களை முன்னெடுக்கும் நிலையில் தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற அழுத்தத்தை கொடுப்பதற்காக இப்படிப்பட்ட முயற்சியை இளைஞர்கள் முன்னெடுத்தால் அது வெற்றி பெறும். ஆனால் அதேசமயத்தில் இந்த உணர்வு பூர்வமான போராட்டம் வன்முறைகளுக்கு வித்திடலாம். சட்டம் ஒழுங்கு தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் போகலாம். இப்படிப்பட்ட நிலைப்பாடுகளை தவிர்க்க தமிழக அரசு வரும் 10-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கின்ற IPL போட்டியை நடத்த விடக்கூடாது.

இதேபோல ஒரு சூழ்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டியை சேப்பாக்க மைதானத்தில் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டதை ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். IPL போட்டி என்பது ஒரு கொண்டாட்டம். கொண்டாடுகின்ற மனநிலையில் தமிழர்கள் இல்லை. அதை இந்த உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. உடனடியாக IPL போட்டிகளை இப்போது நடத்த முடியாது என்று தமிழக அரசு அனுமதி மறுத்து உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுவதும் நடக்கின்ற காவிரி உரிமை போராட்டத்தை IPL போட்டி திசைதிருப்பி விடக்கூடாது என்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

தமன்னாவிற்கு சைபர் கிரைம் சம்மன்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
tamanna summoned by maharashtra cyber crime for ipl telecast issue

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமன்னாவிற்கு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

Next Story

சென்னைக்கு மீண்டும் தோல்வி; தனி ஒருவனாக வெற்றியைத் தேடித்தந்த ஸ்டாய்னிஸ்!

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Chennai super kings again lost to Lucknow team

ஐபிஎல் 2024இன் 39 ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ரகானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரகானே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த டாரியல் மிட்செல் 11 ரன்களும் ஜடேஜா 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை சென்னை அணியினர் எடுத்தனர்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக்கும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். 3 பந்துகளில் ரன் எடுக்காமல் குவிண்டன் டி காக் ஆட்டம் இழக்க, அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் மறுமுனையில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த படிக்கல் 19 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நின்று அபாரமாக, ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஸ்டாய்னிஸ் லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார். லக்னோ அணி இறுதியாக 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டனர். கடந்த போட்டியிலும் லக்னோ அணி சென்னை அணியை தோற்கடித்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாகவும் சென்னை அணியை லக்னோ அணி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.