Skip to main content

சொந்த ஊருக்கு சென்ற இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

Inspector and woman passed away ouse bridge explosion in Pollachi

 

வீட்டுக்குள் இருந்த பிரிட்ஜ் வெடித்துச் சிதறியதில் சென்னை இன்ஸ்பெக்டரும், பக்கத்து வீட்டுப் பெண்ணும் தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சபரிநாத். 40 வயதான இவர், சென்னையில் உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் சபரிநாத்தின் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அண்மையில் உயிரிழந்தார். அதன்பிறகு பொள்ளாச்சியில் உள்ள இவரது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

 

அதே சமயம், சபரிநாத் தன்னுடைய விடுமுறை நாட்களில் சொந்த ஊரான நல்லூர் கிராமத்திற்குச் சென்று ஓய்வெடுப்பது வழக்கம். அதே போல், கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து, நேற்று காலை சபரிநாத் தன்னுடைய வீட்டில் இருக்கும்போது கீழ் வீட்டில் வசித்து வரும் சாந்தி என்பவர் சமையல் செய்வதற்காக சபரிநாத்தின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

 

அப்போது, மேல் வீட்டில் இருந்த பிரிட்ஜ் திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதனிடையே, இந்தப் பயங்கர சத்தத்தைக் கேட்ட சாந்தியின் உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் மேலே சென்று பார்த்தபோது இன்ஸ்பெக்டர் சபரிநாத்தும் சாந்தியும் தீயில் சிக்கி எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்களும் காவலர்களும் வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை நீண்டநேரம் போராடி அணைத்துள்ளனர்.

 

ஆனால், இச்சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் சபரிநாத் மற்றும் சாந்தி ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, இவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து, இச்சம்பவத்தில் வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து இருவர் உயிரிழந்த விவகாரம் பொள்ளாச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்